கோவை, பிப்.19- கோவையில் ஒன்றிய அரசு நடத்தும் பள்ளியில் ஓவிய ஆசிரியர் மாணவிகளுக்கு பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதால், போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம், மருதமலை அருகே உள்ள வடவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ஓவிய ஆசிரியர் ராஜன். இவர் கோவை, ரேஸ்கோர்ஸ் சாலை பகுதியில் அமைந்து உள்ள ஒன்றிய அரசுப் பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவரது வகுப்பு நேரத்தில் ஓவிய பயிற்சி அளிக்கும் போது மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது. மேலும், பள்ளியில் ஓவிய வகுப்பு மற்றும் யோகா வகுப்பு எடுக்கும் போது, மாணவிகளைத் தவறாக தொட்டதாகவும் பாதிக்கப்பட்ட மாணவிகள் பள்ளியின் முதல்வரிடம் புகார் அளித்தனர்.
மாணவிகளிடம் பள்ளி நிர்வாகத்தினர் விசாரானை நடத்தியதில் ஓவிய ஆசிரியர் ராஜன் மாணவிகளிடம் அத்துமீறியது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பள்ளி முதல்வர் அளித்த புகாரின் பேரில், ஓவிய ஆசிரியர் ராஜன் மீது காந்திபுரம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பள்ளி மற்றும் கல்லூரிகளில் கோவை மாநகர போலீசார் மற்றும் குழந்தைகள் நல ஆணையத்தினர் போக்சோ குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அதன் மூலம் பாதிக்கப்பட்ட மாணவிகள் காவல்துறையில் புகார் அளித்து வருகின்றனர்