பொள்ளாச்சி,பிப்.15- பள்ளி மாணவர்களை பாலியல் வன்கொடுமை செய்த சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே பள்ளி மாணவிகள் 2 பேர் மற்றும் மாணவர் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 3 சிறுவர்கள் உட்பட 4 பேர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும், அவர்களிடம் இருந்து செல்போன்களை பறிமுதல் செய்துள்ளனர். சிறுவர்கள் பாலியல் வன்கொடுமை செய்வதை செல்போன்களில் வீடியோ பதிவு செய்ததும் தெரியவந்துள்ளது.
கிராம மக்கள் சைல்ட் லைன் உதவி எண்ணுக்கு (1098) தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தனர். சைல்ட் லைன் ஒருங்கிணைப்பாளரின் புகாரின் அடிப்படையில், பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் துறையினர் 4 சிறுவர்கள் மற்றும் இளைஞர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். 3 சிறுவர்களும், இளைஞரும் வெள்ளிக்கிழமை மாலை கைது செய்யப்பட்டனர்.
இளைஞர் கோவை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார். மற்ற 3 சிறுவர்களும் கோவையில் உள்ள சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள மற்றொரு சிறுவனைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.