tamilnadu

img

கட்டுமான தொழிலாளர் அனைவருக்கும் உதவி தொகை, நிவாரண பொருட்களை வழங்குக அனைத்து தொழிற்சங்க கூட்டுக் குழு வலியுறுத்தல்

 கோவை , ஏப்.22- பதிவு செய்யப்பட்ட அனைத்து கட்டுமான தொழிலாளர்களுக்கும் உதவித்தொகை கிடைத்திட தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும் என கோவை மாவட்ட கட்டுமான அமைப்பு சாரா அனைத்து தொழிற்சங்க கூட்டுக்குழு மாவட்ட ஆட்சியர் வழியாக முதல்வருக்கு மனு அளித்தனர்.  இம்மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, கோவை மாவட்டத்தில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கட்டுமான தொழிலாளர்கள் உள்ளனர். இந்நிலையில் கொரோனா தொற்று   காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், வேலை இழந்து, வருமானம் இன்றி தவித்து வருகின்றனர். இச்சூழலில் தமிழக அரசு சார்பில் உணவு தொகுப்பு, உதவி தொகை வழங்கப்படுவதாக கொடுக்கப்பட்ட பட்டியலில் வாரிய பதிவு நடைமுறையில் உள்ள நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பெயர் விடுபட்டு உள்ளனர்.

இவர்களுக்கு உணவுப் பட்டியலில் பெயர் விட்டு விட்டுப் போனதால் நிதி உதவி கிடைக்குமா என்ற அச்சம் மத்தியில் ஏற்பட்டுள்ளது.எனவே விடுபட்டுப் போன தொழிலாளர்கள் அனைவருக்கும் உதவித்தொகை கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு கல்வி உதவி,மகப்பேறு கால உதவி,திருமண உதவி,இயற்கை மரணத்திற்கான உதவி, பணியிடத்திற்கு வழியில் விபத்தில் மரணமடைந்தார் உதவி ஆகிய தொகையை உயர்த்தி வழங்கலாம் என நல வாரிய கூட்டத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு தொழிலாளர் துறை அமைச்சர் அறிவித்திருந்தார். இது உடனடியாக அமலுக்கு வரும் என தொழிலாளர்கள் ஆவலுடன் காத்து இருக்கின்றனர். ஆனால் அறிவிப்பு வெளியிட்டு 6 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், இதனை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.