tamilnadu

img

தேங்காய் கரித்தொட்டி நிறுவனத்திற்கு எதிராக ஏப்ரல் 10 இல் போராட்டம்

தேங்காய் கரித்தொட்டி நிறுவனத்திற்கு எதிராக ஏப்ரல் 10 இல் போராட்டம்

மூலனூர் ஒன்றியம், வாளையற்காரன்வலசில் அமையவுள்ள ஏவிஐஎம் கிரீன் வென்ச்சர்ஸ் என்ற தேங்காய் கரித்தொட்டி கம்பெனிக்கு எதிராக வடுகப்பட்டியில் ஏப்ரல் 10-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், மூலனூர் ஒன்றியத்தில் அமையவுள்ள இந்த தேங்காய் கரித்தொட்டி கம்பெனிக்கு எதிராக வடுகப்பட்டியில் வெள்ளியன்று, அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. சிபிஎம் குப்புசாமி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் என்.கனகராஜ், மூலனூர் கிளைச் செயலாளர் மாணிக்கம், திமுக சார்பில் பழனிசாமி, துரை தமிழரசன், அதிமுக சார்பில் ராஜரத்தினம், பாலசுப்பிரமணியம், தண்டபாணி, அம்பால் சக்திவேல், முன்னாள் தலைவர் செல்லமுத்து, காங்கிரஸ் பழனிச்சாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதில், அனைத்துக்கட்சிகள் அடங்கிய போராட்டக் குழு அமைக்கப்பட்டது. இக்கூட்டத்தின் முடிவில், இப்பகுதி விவசாய விளைநிலங்கள் நிறைந்த பகுதி, இங்கு தேங்காய் கரித்தொட்டி அமைந்தால் சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிக்கப்படும். நிலங்களில் சாம்பல் படிந்து ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் மேய்க்க முடியாது, நிலத்தடி நீரும் பாதிக்கப்படும். எனவே, ஏவிஐஎம் கிரீன் வென்ச்சர்ஸ் என்ற தேங்காய் கரித்தொட்டி கம்பெனிக்கு எதிராக, ஏப்ரல் 10-ஆம் தேதி வடுகப்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது.