கோயம்புத்தூர்:
நவம்பர் 26 அகில இந்திய பொது வேலைநிறுத்தத்தில் பஞ்சாலைத் தொழிலாளர்கள் முழுமையாகப் பங்கேற்பது என்று தமிழ் மாநில பஞ்சாலைத் தொழிலாளர் சம்மேளனம் முடிவு செய்துள்ளது.
தமிழ் மாநில பஞ்சாலைத் தொழிலாளர் சம்மேளனத்தின் மாநிலக் குழு கூட்டம் கோவை மில் சங்கத்தில் மாநிலத் தலைவர் சி. பத்மநாபன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சிஐடியு மாநில உதவித் தலைவர் எம். சந்திரன் மாநிலக் குழு முடிவுகளை விளக்கினார். மாநில பொதுச்செயலாளர் எம். அசோகன் மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காலத்திற்கு பின்பாக தனியார் பஞ்சாலை, கூட்டுறவு பஞ்சாலை மற்றும் தேசிய பஞ்சாலை தொழிலாளர்களின் பிரச்சனைகள்- நடந்த விஷயங்கள் குறித்து விளக்கிப் பேசினார். பொருளாளர் சக்திவேல் வரவு - செலவு கணக்கு மற்றும் இணைப்பு கட்டண விவரங்கள் குறித்து பேசினார்.
இந்தக் கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் பி. வேலுச்சாமி, சி.பிரான்சிஸ் சேவியர், வி.மாணிக்கவாசகம், கே.பிரபாகரன் உள்ளிட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தொழிலாளர்களுக்கு விரோதமாக சட்டத்திருத்தங்கள், பொதுத்துறைகளை தனியார் மயமாக்குவது, மானியங்கள் குறைப்பு உள்ளிட்ட தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் நடைபெற இருக்கின்ற நவம்பர் 26 வேலைநிறுத்தப் போராட்டத்தில் அனைத்து பஞ்சாலை தொழிலாளர்கள் முழுமையாக பங்கேற்பது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஊதிய ஒப்பந்தம்
கூட்டுறவு பஞ்சாலை ஊழியர்களுடைய ஊதிய ஒப்பந்தம் 2018 டிசம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. சம்மேளனத்தின் சார்பில் கோரிக்கை மனு நிர்வாகத்திடம் கொடுக்கப்பட்டுள்ளது. கோரிக்கை மனுவை நிர்வாகம் பரிசீலிக்க வேண்டும். கடந்த காலத்தைப் போல அனைத்து தொழிற் சங்கங்களையும் அழைத்து பேசி ஊதிய உயர்வு அளிக்க வேண்டும்.
தேசிய பஞ்சாலைகளை திறந்திடுக!
தேசிய பஞ்சாலைகள் கடந்த ஊரடங்குக்குப்பின் திறக்கப்படாமல் உள்ளன. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து தவித்து வருகின்றனர். தமிழகத்தில் இயக்கப்படுகின்ற 7 தேசிய பஞ்சாலைகளும் உடனடியாக திறந்து செயல்பட வேண்டும்.
சிஐடியுவுக்கு பிரதிநிதித்துவம்
தற்பொழுது தமிழக அரசு நியமித்து இருக்கின்ற குறைந்த பட்ச கூலி உயர்வுக்கான கமிட்டியில் சிஐடியு விடுபட்டு இருப்பது எந்த வகையிலும் நியாயமில்லை. உடனடியாக சிஐடியு அமைப்பிற்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும். கமிட்டியும் விரைந்து பஞ்சாலை தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு பரிந்துரைக்க வேண்டும், தமிழக அரசு தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச கூலியை உறுதிப்படுத்த வேண்டும். பஞ்சாலை தொழிலாளிகளுக்கு 20 சத போனஸ் நிர்வாகங்கள் கொடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.