ரயில் மோதி யானைகள் உயிரிழப்பதைத் தடுக்கும் வகையில், கோவையில் செயற்கை நுண்ணறிவு வசதியுடன் கூடிய கண்காணிப்பு கேமரா, கட்டுப்பாட்டு அறையை தமிழ்நாடு வனத்துறை திறந்து வைத்துள்ளனர்.
கோவையில், தமிழ்நாடு - கேரளா எல்லையான வாளையாரில் யானைகளின் உயிரிழப்பைத் தடுக்கும் வகையில் நவீன கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டு அறையை அமைச்சர் மதிவேந்தன் நேற்று திறந்து வைத்தார்.
யானைகள் உயிரிழப்பைத் தடுக்க அதிநவீன சென்சார் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
யானைகள் தண்டவாளத்தைக் கடக்கும்போது உயிரைப் பாதுகாக்கும் வகையில் தண்டவாளங்களின் ஓரம் 500 மீட்டர் இடைவெளிக்கு 12 உயர் கோபுரங்கள் அமைத்து அதில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
கோவையில் 2021-2023 வரை 9,028 முறை யானைகள் வழிதவறி வெளியேறியுள்ளன. கடந்த 2008 முதல் இதுவரை 11 யானைகள் ரயில் மோதி உயிரிழந்துள்ளன. அதனால் யானைகளைக் காக்க உலகிலேயே முதல்முறையாகத் தொடங்கப்பட்ட திட்டம் என்று அமைச்சர் கூறினார்.