டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் 6 விக்கெட் வித்தியாசத்தில் திருப்பூர் அணியை வீழ்த்தி நெல்லை அணி வெற்றி பெற்றது.
6-வது டி. என்.பி.எல். டி20 கிரிக்கெட்டின் தொடக்கச் சுற்று நெல்லையில் கடந்த மாதம் 23 ஆம் தேதி தொடங்கியது. அதைத் தொடர்ந்து கடந்த வாரம் அடுத்த கட்ட லீக் போட்டிகள் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
அந்த வகையில் இன்று நடைபெற்ற போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற நெல்லை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. திருப்பூர் அணி பேட்டிங் செய்தது.
திருப்பூர் அணியின் தொடக்க வீரர்கள் அரவிந்த் ரன்கள் எதுவும் எடுக்கவில்லை. சித்தார்த் 8 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சுப்ரமணியன் ஆனந்த் 15 ரன்களும், ரோகின்ஸ் 13 ரன்களும், துஷார் ரஹேஜா 18 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். திருப்பூர் அணியில் மான் பாஃப்னா அதிகபட்சமாக 37 ரன்கள் எடுத்தார்.
இறுதியாக திருப்பூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, நெல்லை அணியில் ஈஸ்வரன் 3 விக்கெட்டும், ஹரிஸ் 2 விக்கெட்டும் எடுத்தனர்.
118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை அணி களமிறங்கியது. தொடக்க வீரர் ஹரிஸ் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் சூர்ய பிரகாஷ், பாபா இந்திரஜித் இருவரும் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளியபடுத்தினர். சூர்ய பிரகாஷ் 28 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். மறுபுறம் அரைசதம் அடித்த பாபா இந்திரஜித், 63 ரன்கள் எடுத்தார்.
இறுதியாக 15.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் திருப்பூர் அணியை வீழ்த்தி நெல்லை அணி வெற்றி பெற்றது.