கோவை, ஜூன். 11 -
கோவை செம்மாண்டம் பாளையம் , கருமத்தம்பட்டி பகுதிகளில் உயர் கோபுரம் அமைக்க விவசாயிகளை மிரட்டி நில அளவை செய்த அதிகாரிகளின் அத்துமீறல் நடவடிக்கையை கண்டித்து விவசாயிகள் டவர் லைன் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். எதிர்ப்பை மீறி காவல்துறையினரின் பாதுகாப்போடு பவர்கிரிட் அதிகாரிகள் நிலத்தை அளவீடு செய்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசின் பவர் கிரிட் நிறுவனம் சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து தமிழகம் மற்றும் கேரளாவிற்கு மின்சாரம் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இதற்காக திருப்பூர் மாவட்டம் புகளூர் அருகே துணை மின் நிலையம் அமைக்கப்பட்டது. உயர் மின் கோபுரங்கள் மூலம் மின்சாரத்தை விளைநிலங்கள் வழியாக கொண்டு வந்து மற்ற பகுதிகளுக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. கோவை ,திருப்பூர், ஈரோடு, கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி உட்பட 13 மாவட்ட விவசாய நிலங்கள் வழியாக உயர் மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு இந்த திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. உயர் மின் கோபுரங்கள் விளை நிலங்களில் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 13 மாவட்ட விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் காரணமாக நில அளவீட்டு பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது நில அளவீடு பணிகளை அவர்கள் நிறுவனம் மீண்டும் துவங்கியிருக்கிறது. செவ்வாயன்று கோவை மாவட்டம் சோமனூரை அடுத்த செம்மாண்டம் பாளையம், கருமத்தம்பட்டி ஆகிய பகுதிகளில் நில அளவீடு பணியை அதிகாரிகள் நடத்தினர். இதற்கு நிலத்தின் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகள் காவல்துறையினரின் பாதுகாப்போடு விவசாயிகளை மிரட்டி நில அளவீடு பணியை தொடர்ந்தனர். இதனால் ஆவேசமடைந்த விவசாயிகள் இந்த உயர் மின் கோபுரம் அமைக்கும் திட்டத்திற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து தங்களது நிலத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து விவசாயிகளை குண்டுக்கட்டாக காவல்துறையினர் தூக்கிச் சென்று கைது செய்தனர். இதேபோல செம்மாண்டம் பாளையம் கிராமத்தில் நில அளவீடு பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அங்குள்ள டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது நில அளவீடு பணியை திரும்பப் பெறவில்லை எனில் மேலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக எச்சரித்தனர். இதனைத் தொடர்ந்து டவரில் ஏறி போராட்டம் நடத்தும் விவசாயிகளை சமாதானப்படுத்த அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், எங்களை பொருத்தவரை இந்த திட்டத்தை நாங்கள் எதிர்க்கவில்லை. உயர்மின் கோபுரங்கள் அமைக்க படுவதற்கு பதிலாக, புதை வழித்தடமாக மின்சாரத்தை கொண்டு செல்ல வேண்டும். இதன் மூலம் பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படாது. தங்களின் நிலத்தின் மதிப்பும் என்றும் குறையாது என்பதால் மாற்று திட்டத்தை மத்திய அரசுசெயல்படுத்த வேண்டும் என்றே கேட்கிறோம். ஆனால் விளைநிலத்தின்வாழியாகத்தான் இந்த மின்கோபுரத்தை கொண்டு செல்வோம் என அரசு பிடிவாதமாக இருப்பதை ஏற்கமுடியாது. எங்களை தீவிரமான போராட்டத்திற்கு அரசு தள்ளக்கூடாது என்பதை கேட்டுகொள்கிறோம் என்றனர். உயர்மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகளின் ஒருபகுதியினர் டவர் லைன் மீது ஏறி போராட்டம் நடத்துவதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.