tamilnadu

img

கோவை: கும்கி யானை உதவியுடன் காட்டு யானைக்கு சிகிச்சை!

கோவை மேட்டுப்பாளையம் அருகே வாயில் காயங்களுடன் சுற்றி வந்த காட்டு யானைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கோவை மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை, வெள்ளியங்காடு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக வாயில் காயத்துடன் பெண் காட்டு யானை ஒன்று சுற்றி வந்தது. இந்த சூழலில், இந்த காட்டு யானையை பிடிக்க கும்கி யானை சின்னத்தம்பியை வனத்துறையினர் வரவழைத்தனர்.
இதை அடுத்து, இன்று காலை 7 மணி அளவில் யானைக்கு ஊசி செலுத்தி முதற்கட்ட சிகிச்சை தொடங்கியுள்ளனர். வனத்துறையினர் யானையின் கழுத்திலும் பின்னங்கால்களிலும் கயிறுகளை கட்டி யானையை நிறுத்தி, சோதித்த மருத்துவர் சுகுமார் யானையின் நாக்கின் மையப் பகுதியில் வெட்டுக்காயம் உள்ளதாகவும் இதனால் கடந்த நான்கு வாரங்களாக உணவு சாப்பிட முடியாமல் யானை சுற்றி திரிந்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும் தற்போது யானைக்கு சிகிச்சை அளிப்பதே முதல் பணியாகவும் அதற்காக யானையின் ஆசனவாய் பகுதியில் 20 லிட்டர் தண்ணீரை கொடுத்து, பின்னர் யானைக்கு குளுக்கோஸ் அளிக்க இருப்பதாகவும் தகவல் தெரிவித்துள்ளார். 
மேலும் சிகிச்சை தேவைப்பட்டால், யானையை கூண்டில் அடைத்து சிகிச்சை அளிக்க திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்தார். உயர் அதிகாரிகளுடன் ஆலோசனைக்குப் பிறகு முடிவு எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.