கோவையில் அரசு மருத்துவமனை மற்றும் இ.எஸ்.ஐ மருத்துவமனை மருத்துவர்கள் இன்று 24 மணி நேர வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கொல்கத்தாவில் பணியில் இருந்த முதுநிலை பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும், மருத்துவர்களுக்கு பாதுகாப்பான பணிச் சூழலை உருவாக்க வலியுறுத்தியும் நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட் உள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் (ஐ.எம்.ஏ) அறிவித்தது.
அதன் ஒரு பகுதியாக, கோவையில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் இ.எஸ்.ஐ மருத்துவமனை மருத்துவர்கள் இன்று 24 மணி நேர வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இப்போராட்டத்தில் மருத்துவர்களுக்கு பாதுகாப்பான பணிச் சூழலை ஏற்படுத்த வேண்டும். கொலை செய்யப்பட்ட மருத்துவரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வேண்டும். சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.