கோவையில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது, கேள்வி கேட்ட செய்தியாளரை கொச்சையாக பேசிய புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமிக்கு கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
"பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கேள்வி கேட்ட செய்தியாளரை கொச்சையாக பேசிய புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமிக்கு கடும் கண்டனம்.
அரசியல் ஆதரவற்று தொடர் தோல்வியின் விரக்தியில், அரசியலில் தனது இருத்தலை தக்கவைத்துக்கொள்வதற்காக ஊடகவியலாளர் மீது பாய்ந்து பிராண்டிய மருத்துவர் கிருஷ்ணசாமிக்கு கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.
தலைவர் மருத்துவர் கிருஷ்ணசாமியின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றுள்ளது. அப்போது அவரிடம் இட ஒதுக்கீடு தொடர்பான கேள்விகளை செய்தியாளர்கள் எழுப்பி உள்ளனர். அப்போது மூத்த செய்தியாளர் திரு குருசாமி எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் திணறிய மருத்துவர் கிருஷ்ணசாமி. ஒரு கட்டத்தில் நிதானம் இழந்து அச்சில் ஏற்ற முடியாத வார்த்தையை நேரலையிலேயே பேசி இருக்கிறார். அவர் இதுபோன்று நடந்து கொண்டிருப்பது முதல் முறை அல்ல என்பதால் பத்திரிகையாளர்களுக்கு வியப்பு ஏற்படவில்லை. தன்னை அரசியல் அரங்கில் முக்கியத் தலைவராக கருதிக் கொள்ளும் மருத்துவர் கிருஷ்ணசாமி, அச்சிலேற்ற முடியாத வார்த்தையைப் பேசி இருப்பது அவரது முதிர்ச்சியற்ற தன்மையைக் காட்டுகிறது. திரு.கிருஷ்ணசாமியின் இந்த பேச்சு பத்திரிகையாளர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர் கிருஷ்ணசாமி தன் அரசியல் சுயலாபங்களுக்காக சக அரசியல் தலைவர்களிடம் தனது கொள்கைகளையும் சுயமரியாதையையும் அடகு வைப்பதை அவர் பெருமிதமாக நினைக்கலாம். ஆனால், பத்திரிகையாளர்கள் பொதுவெளியில்
கண்ணியத்தையும் தங்களது சுயமரியாதையையும் விட்டுக் கொடுக்க ஒருபோதும் தயாராக இல்லை என்பதை இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
இதற்கு முன்பும் மருத்துவர் கிருஷ்ணசாமி இதே போல் செய்தியாளர் ஒருவரின் சாதிய பின்புலத்தை ஆராய்ந்து அதற்காக கடும் கண்டனத்தை சந்தித்திருக்கிறார். 'யாகாவாராயினும் நாகாக்க' என்ற வள்ளுவரின் சொல்லை அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லையோ என்று இந்த சம்பவம் மீண்டும் நினைவூட்டுகிறது. ஒருவர் கற்ற கல்வியும் சமூகத்தில் அவருக்கான மரியாதையும் அவரது சொல்லும் செயலுமே உறுதிப்படுத்தும் என்பதை மீண்டும் ஒருமுறை அவருக்கு சுட்டிக்காட்ட வேண்டி உள்ளது. திரு.குருசாமி கோவை மாவட்டத்தின் மூத்த செய்தியாளர் மட்டுமின்றி சமூக அக்கறை கொண்ட பத்திரிகையாளர் என்பதை ஊரறியும். இதை மருத்துவர் கிருஷ்ணசாமிக்கு மீண்டும் ஒருமுறை நினைவூட்டுகிறோம். அச்சிலேற்ற முடியாத வார்த்தையை செய்தியாளர் சந்திப்பில் பேசிய மருத்துவர் கிருஷ்ணசாமி அதற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் அழுத்தம் திருத்தமாக இல்லையெனில் ...ச்சீ..போ.. என புறந்தள்ளி ஊடகவியலாளர்கள் எப்போதும் போல எங்கள் கடமையை செய்து கொண்டேதான் இருப்போம். அதே நேரத்தில் அரசியலில் தனது இருத்தலை தக்கவைத்துக்கொள்வதற்காக ஊடக வெளிச்சத்தை எதிர்பார்த்து நீங்கள் அழைக்கும்போதும் நாங்கள் வருவோம். நீங்கள் ஒரு அரசியல்வாதி என்பதற்காக அல்ல... ஒவ்வொரு மனிதனின் குரலையும் இந்த சமூகம் கேட்க வேண்டும் என்கிற ஊடக நெறிமுறைதான் அதற்கும் காரணம். "இண்ருழ்த்தும் நாறா மலரனையர் கற்றது உணர விரித்துரையா தார்" என்ற திருக்குறளை டாக்டர் கிருஷ்ணசாமி ஒருமுறை பொருள் உணர்ந்து படித்துக் கொள்வது சாலச் சிறந்ததாக இருக்கும் என கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் கருதுகிறது." இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.