தமிழ்நாட்டின் முதல் கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறக்க கோரிக்கை
தமிழ்நாட்டின் முதல் கூட்டுறவு சர்க்கரை ஆலையான அமராவதி சர்க்கரை ஆலையை புனரமைக்க தேவையான நிதியை தமிழக அரசு உடனடியாக ஒதுக்கீடு செய்து ஆலையை திறக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் எம்.எம். வீரப்பன் தெரிவிக்கையில் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலூகா கிருஷ்ணாபுரம் பகுதியில் 1960 ஆம் ஆண்டு தமிழகத்தின் முதல் கூட்டுறவு சர்க்கரை ஆலை என்ற சிறப்புடன் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை நாள்ஒன்றுக்கு 1, 250 டன் கரும்பு அரவை செய்யும் திறன் கொண்டதாக இருந்தது.பின் இது 1994 ஆம் ஆண்டு ஆலையின் கழிவுகளில் இருந்து எரிசாரயம் தாயரிக்கும் ஆலையும் தொடங்கப்பட்டது. ஆலையில் ஆண்டுதோறும் ஏப்ரல் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை அரவை பருவமாகும். தொடர்ந்து 60 ஆண்டுகளை கடந்து இயங்கும் இயந்திரங்களில் அடிக்கடி பழுது ஏற்படுவதால் ஆலையின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. எனவே ஆலையை தொடர்ந்து இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் தொழிலாளர்களுக்கு சீராக சம்பளம் வழங்கமுடியாமலும், புதிய இயந்திரங்களை பொருத்த முடியாமலும் ஆலை கடந்த இரண்டு ஆண்டுகளாக இயங்காத நிலைக்கு தள்ளப்பட்டது. தமிழ்நாட்டின் முதல் கூட்டுறவு சார்க்கரை ஆலையை நவீனபடுத்த சுமார் 80 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதே தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் கோரிக்கையாகும்.