கோவை செல்வபுரம் அசோக் நகர் பகுதியில் ஒரே நாளில் 116 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கோவை மக்களிடையே பீதியை உருவாக்கியுள்ளது.
கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் 147 என்கிற எண்ணிக்கை நீண்ட நாட்கள் மருத்துவ துறையின் பட்டியலில் இருந்து வந்த நிலையில் தற்போது 700 க்கும் மேற்பட்டோர் இத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த மூன்று வாரங்களில் அதிகரித்துள்ளது. இதனால் பரிசோதனைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கோவையில் ஞாயிறன்று நிலவரப்படி 741 பேர் கொரோனா தொற்று காரணமாக பாதிப்படைந்திருந்தனர்.
இந்நிலையில் கோவை செல்வபுரம் மற்றும் செட்டிவீதி பகுதியில் கொரோனா தொற்று அதிகரித்து வந்தது. குறிப்பாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜூனன் உள்ளிட்ட இவர்களின் குடும்பத்தினருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து அப்பகுதி தனிமைப்படுத்த பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனை அதிகரிக்கப்பட்டது. இதன் ஒருபகுதியாக செல்வபுரம் சுற்றியுள்ள பகுதிகளில் 150 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டதில் 116 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து, அப்பகுதி முழுவதும் சுகாதாரத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, நோய் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டு, தடுப்புகள் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.