ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆட்சியர் ஆய்வு
தருமபுரி, ஜூன் 8- கடத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆட்சியர் சதீஷ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தருமபுரி மாவட்டம், கடத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ் ஞாயிறன்று திடீர் ஆய்வு மேற் ற்கொண்டார். அப்போது, கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும், அங்கு பதிவு செய்யப்பட்டுள்ள கர்ப்பிணிகளின் எண்ணிக்கை, ஸ்கேன் சேவைகள், ஆய்வக பரிசோதனைகள், வழங்கப்படும் உணவுகள் குறித்தும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் கேட்டறிந்தார். மேலும், பொது மருத்துவம், பெண்கள் நலப்பிரிவு, குழந்தைகள் நலப்பிரிவு, விஷ முறிவு சிகிச்சைகள் மற்றும் விஷ முறிவு சிகிச்சைகளுக்கான மருந்துகள் இருப்பு உள்ளிட்ட பிரிவுகளில் ஆய்வு செய்து, மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் அக்கறையுடனும், பரிவுடனும் நடந்து கொண்டு சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு அறிவுறுத்தினார். இந்நிகழ்வில், வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன், அரசுத்துறை அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் உடனிருந்தனர்.