கோவை, மே.6 -
ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, கோவை புறநகர் பகுதிகளில் உள்ள தொழிற்பேட்டைகள் கட்டுப்பாடுகளுடன் இயங்க தொடங்கியுள்ளன.
கொரோனா அச்சுறுத்தலை தொடர்ந்து கடந்த 40 நாட்களுக்கு மேலாக ஊரடங்கு அமலுக்கு இருந்த நிலையில் தற்போது சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதில், கோவை புறநகர் பகுதிகளில் உள்ள தொழிற்பேட்டைகள் கட்டுப்பாடுகளுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் மாநகர பகுதிகளில் சிறு, குறு, நடுத்தர தொழில் கூடங்கள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி புறநகர் பகுதியில் அமைந்துள்ள கோவை ஈச்சனாரி மற்றும் மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள தொழிற்பேட்டைகள் 43 நாட்களுக்கு பிறகு புதன்கிழமை முதல் இயங்க துவங்கியுள்ளன. 50 சதவீத பணியாளர்களை கொண்டு தொழிற்கூடங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பணியாளர்கள் முகக்கவசம் அணிந்து பணியாற்றி வருகின்றனர்.பணியாளர்களின் உடல் வெப்ப நிலை சோதிக்கப்பட்டு, கிருமி நாசினி கொண்டு கைகள் சுத்தம் செய்யப்பட்ட பின்னரே தொழிற்சாலைகளுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். இதேபோல இயந்திரங்கள் மீதும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.
இது குறித்து தொழில் துறையினர் தெரிவிக்கையில், 43 நாட்களாக தொழில் கூடங்கள் மூடப்பட்டு வருமானம் இழந்து உள்ளோம். தளர்வுகளுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டு இருந்தாலும் தொடர்ந்து தொழிற்சாலைகளை இயக்குவதில் சிக்கல் நீடிக்கிறது. ஊரடங்கிற்கு முன்னர் அனுப்பப்பட்ட உற்பத்தி பொருட்களுக்காக தொகை கிடைக்க பெறவில்லை. இனி ஜாப் ஆர்டர்கள் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. அதேபோல் சிறு, குறு தொழிற்சாலைகளில் பெரும்பாலும் வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வந்த நிலையில் அவர்கள் சொந்த ஊர் செல்லும் முனைப்பில் உள்ளனர். இதனால் வட மாநில தொழிலாளர்களை தக்க வைப்பதில் சிக்கல் இருக்கிறது என தெரிவித்தனர்.