அரசு காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், புதிய வேலைவாய்ப்புகளை நிரந்தர பணியிடங்களாக உருவாக்கிட வேண்டும், சிறு குறு தொழில் நிறுவனங்களை பாதுகாத்திட வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை விற்கக் கூடாது என்கின்ற 4 கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் திருச்சியில் மே1 ம் தேதி மாபெரும் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்திற்கு கலந்துகொள்ள தமிழகத்தில் சென்னை, கன்னியாகுமரி, கோவை, பாண்டிச்சேரி ஆகிய நான்கு முனைகளில் இருந்து சைக்கிள் பயணம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த சைக்கிள் பயணத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலத் துணைச் செயலாளர் சி.பாலசந்திரபோஸ் தலைமையில் கோவையிலிருந்து ஒரு குழு புறப்பட்டது. இந்த சைக்கிள் பயணத்தை வாலிபர் சங்கத்தின் கேரள மாநில செயலாளர் தாமஸ் கொடியசைத்து துவக்கி வைத்தார். கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் படிப்பகம் முன்பு தொடங்கிய இந்த பயண குழு துடியலூர் ஆவாரம்பாளையம் சிங்காநல்லூர் வழியாக திருச்சி செல்கிறது.
முன்னதாக பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து அவர்களது கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்நிகழ்வில் கோவை மாவட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன், சிஐடியு கோவை மாவட்ட தலைவர் பத்மநாபன், இந்திய மாணவர் சங்கம் கோவை மாவட்ட செயலாளர் தினேஷ், உள்ளிட்டோர் கலந்து கொண்டு பயண குழுவிற்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த பாலசுந்திரபோஸ், ஒன்றிய அரசு 9 லட்சத்தும் மேல் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் . திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறிய ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு வேலை தருவதாக கூறிவிட்டு கடந்த ஆண்டு 1 லட்சம் பேருக்கு கூட வேலை வாய்ப்பை தர வில்லை எனவே ஒன்றிய மற்றும் மாநில அரசு உடனடியாக வேலை வாய்ப்பை வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். மேலும் ஒன்றிய அரசு மத வெறியை தூண்டி விடுவதாகவும் அதனை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் அனுமதிக்காது என்றும் தெரிவித்தார்.