tamilnadu

img

கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை... தமிழக முதல்வரின் கோரிக்கைக்கு பி.ஆர்.நடராஜன் எம்.பி., வரவேற்பு...

கோவை:
கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைத்திட வேண்டும் என்று  பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியதற்கு கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வரவேற்பும், நன்றியும் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 

மேற்கு மண்டலத்தின் மையமாக கோவை மாவட்டம் அமைந்துள்ளது. மருத்துவ கேந்திரமாகவும் கோவை மாவட்டம் திகழ்கிறது. இங்கு கோவை மட்டுமல்லாது திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் மருத்துவ சிகிச்சைக்காக நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில் இந்திய ஒன்றிய அரசின் பிரதமர்மோடியை வியாழனன்று சந்தித்ததமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டிற்கு தேவை யான முக்கியமான கோரிக்கைகள் குறித்த பட்டியலை அளித்து வலியுறுத்தியுள்ளார். 

இதில், கோவை மாவட்டத்தில் எய்ம்ஸ்மருத்துவமனை அமைக்கப்பட வேண்டும் என்கிறவலியுறுத்தலும் முக்கியமானது. கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிக தீவிரமாகி நாள்தோறும் 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இத்தொற்றினால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டு வந்தனர். கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இத்தொற்று மிக அதிக தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. தமிழ்நாடு முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற நாளில் இருந்து சுமார் ஒரு மாத காலத்திற்குள்ளாக தீவிரமான நடவடிக்கையின் காரணமாக தற்போது இத்தொற்று மிக கணிசமாக குறைந்துள்ளது. இதற்கு பிரதானமாக மருத்துவ கட்டமைப்பை உருவாக்கியதே முக்கிய மானக் காரணமாகும். இதனிடையே மூன்றாவது அலை குழந்தைகளை பாதிக்கும் என்கிற மருத்துவத்துறையினரின் எச்சரிக்கையை உள்வாங்கிக்கொண்டு தற்போது இருந்தே இதற்கான மருத்துவ கட்டமைப்பை உருவாக்கும் முனைப்பில் தமிழ்நாடுஅரசு ஈடுபட்டிருப்பது வரவேற்கத்தக்க ஒன்றாகும். தற்போது நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு அவர் அளித்த செய்தியாளர் சந்திப்பில் தமிழ்நாட்டின்நலன் காக்க பாடுபடுவேன் எனவும், எங்களுக்கு வாக்களித்தவர்கள் மகிழவும், வாக்களிக்காதவர்கள் இவர்களுக்கு வாக்களிக்க வில்லையே என்கிற ஏக்கத்தையும் உருவாக்கும் வகையில் ஆட்சி செய்வோம் என்றார். அந்தவகையில்மு.க.ஸ்டாலின், ஆட்சியில் அமர்ந்த வுடன் இதனை நடைமுறைப்படுத்தும் பணியில் இறங்கியுள்ளது உள்ளபடியே மகிழ்வை ஏற்படுத்துகிறது.

அந்த வகையில் கோவை மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட வேண்டும் எனஇந்திய ஒன்றியத்தின் பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளது வரவேற்கத்தக்க ஒன்றாகும். இதனை கோவை மாவட்ட மக்களின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளை உடனடியாக துவக்க வேண்டும். கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட வேண்டும் என்கிற தமிழ்நாடு முதலமைச்சரின் கோரிக்கையின் நியாயத்தை ஒன்றிய அரசு உணர்ந்து உடனடியாக அதற்கான ஒப்புதலை அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். மேலும் இக்கோரிக்கையை வலுப்படுத்த நாடாளுமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் தொடர்ந்து குரல் எழுப்புவேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

;