tamilnadu

img

ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான வாகனம்: தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து வழங்கிய பி.ஆர்.நடராஜன் எம்பி.,

கோவை, மே 3 – ரூ.7 லட்சம் மதிப்பீட்டில், மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட வாகனங்கள் நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதனை சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு பி.ஆர்.நடராஜன் எம்பி., இன்று (புதன்கிழமை) வழங்கினார்.

மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினரான பி.ஆர்.நடராஜன், தனது தொகுதி மேம்பாட்டு நிதியினை பல்வேறு மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்காக ஒதுக்கீடு செய்து வருகிறார். குறிப்பாக ஒடுக்கப்பட்ட தலித் மக்கள் பயன்பெறும் வகையில், அவர்கள் வசிக்கும் பகுதியில் சமூதாய கூடங்கள் அமைப்பது, மாவட்டத்தின் உட்புற கிராமப்பகுதிகளில் குடிநீர் தொட்டிகள் அமைப்பது, குழந்தைகளுக்கான அங்கன்வாடி, சத்துணவு கூடங்கள் அமைப்பது, நியாயவிலை கடைகள் அமைப்பது, மாற்றுத்திறனாளிகளுக்கான இருசக்கர வாகனம் பெறுவதற்கு என முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து வருகிறார்.

இதன்தொடர்ச்சியாக கோவை நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மாற்றுத் திறனாளிகள் எட்டு பேருக்கு பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட வாகனங்களை பெறுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்திருந்தார். தலா ஒரு வாகனம் ரூ 83 ஆயிரத்து 500 மதிப்பீட்டில்,  எட்டு வாகனங்களுக்கு ரூ.6 லட்சத்து 68 ஆயிரம் நிதியில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட வாகனங்களை வரவழைக்கப்பட்டு சம்பந்தப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு ஒப்படைக்கும் நிகழ்வு காந்திபுரத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்றது.

பி.ஆர்.நடராஜன் எம்பி., தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் சி.பத்மநாபன், கோவை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கோ.வசந்த ராம்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னதாக,  பெரியநாயக்கன்பாளையம், எஸ்.எஸ்.குளம், சூலூர், கோவை வடக்கு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகள் இந்த வாகனத்தை பெற்றுக்கொண்டு பி.ஆர்.நடராஜன் எம்பி.,க்கு நன்றி தெரிவித்தனர்.