அவிநாசி அருகே பாப்பாங்குளம் பகுதியில் உள்ள தோட்டத்தில் திங்களன்று புகுந்த சிறுத்தை தாக்கியதில் இருவர் காயம் அடைந்தனர்.
அவிநாசி அருகே பாப்பாங்குளத்தை சேர்ந்தவர் வரதராஜன்(63). தோட்டத்து உரிமையாளர். இவர் தனது தோட்டத்தில் சோளத்தட்டை விதைத்துள்ளார். இந்த நிலையில் அறுவடை பணிகளை கடந்த 2 நாட்களாக மேற்கொண்டு வந்துள்ளார். வரதராஜன் விவசாய கூலித் தொழிலாளி மாறன் (66) என்பவருடன் இணைந்து இன்று அதிகாலை வழக்கம் போல்
தோட்டத்தில் அறுவடை பணிகளை மேற்கொண்டிருந்தார். அப்போது புகுந்த சிறுத்தை வரதராஜனின் தோள்பட்டை பகுதியை பலமாக தாக்கியது. அதேபோல் சோளத்தட்டையை அறுத்துக்கொண்டிருந்த மாறனின் முகப்பகுதியை தாக்கியது. இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். இருவரின் அலறல் சத்தம் கேட்டு, அருகில் வசித்து வந்த தோட்டக்காரர்கள் சேவூர் போலீஸாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து திருப்பூர் கோட்ட வனச்சரகத்தினர், சேவூர் போலீஸார் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டு சிறுத்தையை தேடி வருகின்றனர். படுகாயம் அடைந்த 2 பேரும், அவிநாசி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவிநாசி பகுதியில் சிறுத்தை புகுந்த சம்பவம், அப்பகுதியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.