tamilnadu

திறந்தவெளியில் இருசக்கர வாகன நிறுத்தங்கள்: விதிப்படி செயல்பட நுகர்வோர் அமைப்பு கோரிக்கை

திருப்பூர், மே 5 –திருப்பூர் மாவட்டத்தில் இருசக்கர வாகன நிறுத்தங்கள் உரிய விதிமுறைப்படி செயல்பட வேண்டும் என்று நுகர்வோர் அமைப்பு வலியுறுத்தி உள்ளது.திருப்பூரில் உள்ள நகராட்சி மண்டல நிர்வாக இயக்குநருக்கு இது தொடர்பாக கன்ஸ்யூமர் கேர் என்ற நுகர்வோர் அமைப்பின் தலைவர் எஸ்.காதர்பாட்ஷா அண்மையில் கடிதம் எழுதி இருக்கிறார். இதில் இருசக்கர வாகன வாடகை நிறுத்தங்களில் போதுமான நிழற்கூடங்கள் இருக்க வேண்டும். திடீர் தீவிபத்துகள் ஏற்பட்டால் தீயணைப்பதற்கு உரிய உபகரணங்கள் போதுமான அளவு வைத்திருக்க வேண்டும் என விதிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை என்றும், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவும் கோரி இருந்தார்.இந்நிலையில் உடுமலை நகராட்சி நிர்வாகத்தின்கீழ் இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் நிர்வாகிக்கப்படவில்லை என பதில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் திருப்பூர், அவிநாசி உள்பட மாநகராட்சி, பேரூராட்சி எல்லைக்குள் செயல்படும் தனியார் இருசக்கர வாகன நிறுத்தங்களில் மேற்படி நிழற்கூடம், தீயணைப்பு கருவிகள் வைத்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன்தான் உரிமங்கள் வழங்கப்படுகின்றன. ஆனால் பல இருசக்கர வாகன நிறுத்தங்களில் இத்தகைய முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் இருப்பதில்லை என்று கன்ஸ்யூமர் கேர் சுட்டிக்காட்டி உள்ளது.திருப்பூர் மாநகராட்சி, அவிநாசி பேரூராட்சி மட்டுமின்றி திருப்பூர் ரயில் நிலைய வளாகத்திலும் இருசக்கர வாகனங்களை உரிய பாதுகாப்புடன் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த விசயத்தில் தீயணைப்பு அலுவலரும் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காதர்பாட்ஷா கேட்டுக் கொண்டிருக்கிறார்.