தஞ்சாவூர் மே 5- தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை மற்றும் வாட்டாகுடியில் கம்யூனிஸ்ட் தியாகிகள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பட்டுக்கோட்டை
வர்க்கப் போரில் உயிர்நீத்த கம்யூனிஸ்ட் தியாகிகள் ஜம்புவானோடை சிவராமன், வாட்டாகுடி இரணியன், ஆம்பலாப்பட்டு ஆறுமுகம் ஆகியோரின் 70-வது நினைவு தினத்தை முன்னிட்டு, பட்டுக்கோட்டையில் உள்ள தியாகிகள் நினைவிடத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு பட்டுக்கோட்டை ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர் எம்.செல்வம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மதுக்கூர்
மதுக்கூர் ஒன்றியம் வாட்டாகுடி வடக்கில் விவசாயிகள் இயக்க மாபெரும் தலைவர் வாட்டாகுடி இரணியன் நினைவு சின்னத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மலர்வளையம் வைத்து, இரண்டு கட்சிகளின் கொடி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.சி.பழனிவேலு, மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.காசிநாதன், விவசாயிகள் சங்க நிர்வாகி ஏ.எம்.வேதாச்சலம், கிளைச் செயலாளர்கள், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் மு.அ.பாரதி, மாவட்ட துணைச் செயலாளர் கல்யாணசுந்தரம், சி.பக்கிரிசாமி மற்றும் கிராமத்தினர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.