tamilnadu

பிஏபி வாய்க்காலில் மூழ்கி கல்லூரி மாணவர் உள்ளிட்ட மூவர் பலி

திருப்பூர், மே 12 -திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே பிஏபி வாய்க்காலில் மூழ்கி கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலியானார்கள். அதே வாய்க்காலில் மற்றொரு சம்பவத்தில் தண்ணீரில் அடித்து சென்ற மகனை காப்பாற்றிய தொழிலாளி உயிரிழந்தார்.திருப்பூர் மாவட்டம் காங்கேயம், நல்லிபாளையத்தை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் பூபதி (18). முத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வந்தார். இவர் சனியன்று தனது உறவினரான பொங்கலூர் அருகே உள்ள தொங்குட்டிபாளையத்தைச் சேர்ந்த சேமான் என்பவரது மகன் தமிழரசு (18) வீட்டிற்கு சென்றார்.பின்னர் பூபதி, தமிழரசு உள்பட 7 பேர் ஒன்றாக சேர்ந்து திருப்பூர் தாராபுரம் சாலை ஆண்டிபாளையம் அருகே செல்லும் பிஏபி வாய்க்காலில் குளிக்கச் சென்றனர். பூபதி, தமிழரசு இருவருக்கும் நீச்சல் தெரியாததால் படியில் அமர்ந்து குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக இருவரும் வழுக்கி தண்ணீருக்குள் விழுந்துவிட்டனர். அந்த பகுதியில் 8 அடி உயரத்திற்கு தண்ணீர் சென்று கொண்டிருந்ததால் அவர்களால் வெளியே வரமுடியவில்லை. இதையடுத்து தமிழரசு இறந்த நிலையில் கிருஷ்ணாபுரம் என்ற இடத்தில் அவரது உடல் மீட்கப்பட்டது. அதற்கு சற்றுத் தொலைவில் கண்டியன்கோவில் பகுதியில் பூபதி உடல் மீட்கப்பட்டது. இருவரது உடலையும் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அவிநாசிபாளையம் காவலர்கள் வழக்குப் பதிவு செய்தனர்.அதுபோல் தாராபுரம், கொழுமங்குளியை அடுத்த அண்ணாநகரை சேர்ந்த கூலித்தொழிலாளி ராஜேந்திரன் (34) என்பவர் மகன் பிருத்விராஜ் (10) உடன் ஆண்டிபாளையத்தில் உள்ள பி.ஏ.பி. வாய்க்காலில் வெள்ளிக்கிழமை குளித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென பிருத்விராஜ் தவறி தண்ணீரின் உள்ளே விழுந்து விட்டார். தனது மகனை காப்பாற்றும் நோக்கில் ராஜேந்திரன் வாய்க்காலில் குதித்து மகனை பிடித்து கரையின் ஓரத்தில் தள்ளினார். இதனால் கரையின் சுவரை பிடித்து பிருத்விராஜ் தப்பினார்.ஆனால் ராஜேந்திரனை தண்ணீர் அடித்துச்சென்று விட்டது. கிருஷ்ணாபுரம் என்ற இடத்தில் ராஜேந்திரன் இறந்த நிலையில் அவரது உடலை மீட்டனர். அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அவிநாசிபாளையம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.