tamilnadu

இ பாஸ் வழங்குவதில் கட்டுப்பாடுகள் கடுமைப்படுத்துவதாக அறிவிப்பு

திருப்பூர், ஜூலை 18 - திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றுப் பரவல்  வேகமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இ பாஸ்  வழங்குவதில்  சில கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டு, இங்கிருந்து வெளியே செல்வோர் அல்லது பிற மாவட்டங் களில் இருந்து இங்கே வருவோர் என அனைவரிடமும் முழு  விசாரணை நடத்தப்பட்ட பின்னரே இ பாஸ் வழங்கப்படும் என மாநில அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறி யுள்ளார். திருப்பூர் மாவட்டத்தின் கொரோனா தடுப்புப் பணிகள் மற்றும் குடிமராமத்து, வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளியன்று நடந்தது. இக்கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது: திருப்பூரைப் பொருத்தவரை இங்கே இருப்பவர்கள் யாருக்கும் பாதிப்பு  கிடையாது. வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங் களில், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள்  மூலமாக மட்டுமே கொரோனா நோய் தொற்று பரவியுள்ளது. திருப்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்போது 112 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இம்மாவட்டத்தில் 385 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தாலும் கூட, இதுவரை 170க்கும் மேற்பட்டோர் பூரண குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் உள்ளோரும் நல முடன் இருக்கிறார்கள். இம்மாவட்டத்தில் தற்போதுகூட 2 ஆயிரத்து100  படுக்கை வசதிகளுடன் முகாம்கள் தயார் நிலை யில் உள்ளது. கொரோனோ தொற்றை மேலும் கட்டுப் படுத்த இ பாஸ் வழங்குவதில்  சில கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டு, முழுமையாக விசாரணை நடத்தப் பட்ட பின்னரே இ பாஸ் வழங்கப்படும் என்றார்.