தாராபுரம், மே 22 -தாராபுரத்தின் அடையாளமாக விளங்கிய அமராவதி சிலை சாலை விரிவாக்க பணிக்காக குப்பையில் தூக்கி வீசப்பட்டுள்ளது. மீண்டும் நிறுவ பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தாராபுரம் நகரின் குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் முக்கிய நீராதாரமாகவும் விளங்குவது அமராவதி ஆறாகும். இந்த ஆறு சுமார் ஒன்னரை லட்சம் மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும், புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு பாசனத்தில் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிற்கு பாசன வசதிக்கும் ஆதாரமாக இருந்து வருகிறது. இதனை போற்றும் வகையில் 15 ஆண்டுகளுக்கு முன்பு பொதுப்பணித்துறை மற்றும் சமூக நல அமைப்புகள் சார்பில் தாகம் தீர்க்கும் அமராவதி அன்னையின் சிலை வைக்கப்பட்டது. சிலை அமைக்கப்பட்டுள்ள பகுதியில் நன்கொடையாளர்கள் உதவியுடன் இரவு நேரங்களில் மின் விளக்குகள் மற்றும் அமராவதி அன்னை சிலையில் இருந்து தண்ணீர் விழுவது போன்ற அமைக்கப்பட்டது. இது அனைவரையும் ஈர்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தாராபுரம் நகரின் நுழைவுப்பகுதியாக அமராவதி அன்னை ரவுண்டானா அமைந்திருந்ததால் தாராபுரத்தின் முக்கிய அடையாளமாக இருந்து வந்தது. அமராவதி நதியை போற்றும் வகையில் வைக்கப்பட்ட சிலையாக உள்ளதால் தாராபுரம் வட்டார மக்களின் விருப்பத்திற்குரிய சிலையாகவும் இருந்தது.இந்நிலையில் திருப்பூர் அவிநாசிபாளையம் முதல் ஒட்டன்சத்திரம் வரையில் நான்குவழிச்சாலை அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்சமயம் தாராபுரம் பேருந்து நிலையம் அருகில் மேம்பாலத்திற்காக தூண்கள் அமைக்கப்பட்டு வருகிறது. தூண்கள் அமைப்பதற்காக திங்கள்கிழமை நள்ளிரவில் அமராவதி சிலையை அப்புறப்படுத்தி சாலையோரம் குப்பையில் வீசப்பட்டதாக தெரிகிறது. இதையறிந்த பொதுமக்கள் தாராபுரத்தின் அடையாளமாகவும், மக்களின் விருப்பத்திற்குரிய சிலையாகவும் விளங்கிய அமராவதி அன்னை சிலை குப்பையில் போடப்பட்டது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து பேஸ்புக், வாட்-சப் வாயிலாக தங்களது உணர்வுகளை பகிர்ந்துள்ளனர். மேலும் அதிகாரிகள் தலையிட்டு அமராவதி அன்னை சிலையை மீட்டு உரிய மரியாதையுடன் மீண்டும் நகரின் முக்கிய பகுதியில் நிறுவவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.