விவசாயிகள் குற்றச்சாட்டு
சேலம், செப்.22- சேலம், மகுடஞ்சாவடி பொன்னி ஆறு 16 கண் பாலத்தின் நீரோடை பகுதியில் மண் கொட்டப் பட்டதால் அடைப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டி உள்ளனர். சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி பகுதியில் ரூ.45 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அவ்விடத்தில் வெட்டி எடுக்கப்படும் கற்கள் மற்றும் மண்ணை மகுடஞ்சாவடி பகுதியில் உள்ள பொன்னி ஆறு 16 கண் பாலம் நீரோடை பகுதியில் கொட்டி வருகின்றனர். இதற்கு விவசாயிகள், பொது மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மழைக் காலங்களில் மழைநீர் கஞ்சமலை அடிவாரத்தில் இருந்து இளம்பிள்ளை, நடுவனேரி, காக்காபாளையம் உள்ளிட்ட ஏரிகளுக்கு தண்ணீர் வரும் வழியாக மகுடஞ்சாவடி பகுதியிலுள்ள பொன்னி ஆறு 16 கண் பாலம் உள்ளது. மேலும் மழைநீர் கூடலூர், அடைப்புகாடு, செண்பகமாதேவி ஏரி, மல்லசமுத்திரம் ஏரி உள்ளிட்டவைகளுக்கு செல்கின்றன. தற்போது பெய்த தொடர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் பொன்னி ஆறு 16 கண் பாலம் வழியாக மழைநீர் செல்ல முடியாத அளவுக்கு வெட்டி எடுக்கப்பட்ட தார், ஜல்லி, கற்கள் மற்றும் மண்ணை கொட்டி பாலத்தை முற்றிலும் அடைக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித் துறையினர் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.