tamilnadu

சிகிச்சைக்கு வரும் ஆடு, மாடுகளுக்கு தண்ணீர் வழங்க நடவடிக்கை

கோவை, மே 15-கோடை காலத்தையொட்டி கோவை மாவட்டத்தில் உள்ள கால்நடை மருத்துவமனை, மருந்தகங்களில் தண்ணீர் தொட்டி அமைத்து சிகிச்சைக்கு வரும் கால்நடைக்கு தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கோடை வெயில் உச்சத்தை அடைந்துள்ளது. பல மாவட்டங்களில் வெயில் தினமும்100 டிகிரிக்கு மேல் நிலவி வருகிறது. இந்த கடும் வெயிலின் காரணமாக மாநிலம் முழுவதும் வறட்சி ஏற்பட்டு தண்ணீர் பற்றாக்குறை இருந்து வருகிறது. இதனால், கால்நடைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கால்நடைகளுக்கு தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையிலும், கால்நடை மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு வரும் ஆடு, மாடுகளுக்கு தண்ணீர் வழங்க தண்ணீர் தொட்டி அமைக்க வேண்டும் என கால்நடை பராமரிப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கால்நடை மருத்துவமனைகள், மருந்தகங்களில் சிகிச்சைக்கு வரும் கால்நடைகளுக்கு தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கோவை மாவட்டத்தில் உள்ள கால்நடை மருத்துவமனைகள், மருந்தகங்களில் தண்ணீர் வழங்க பெரிய அளவிலான தொட்டிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் கோவையில் 58 கால்நடை மருந்தகம், பொள்ளாச்சியில் 37 கால்நடை மருந்தகம் என மொத்தம் 95 மருந்தகம், 14 கால்நடைமருத்துவமனைகள், ஒரு பன்முக மருத்துவமனை, பொள்ளாச்சியில் பிரதம மருத்துவமனை செயல்படுகிறது. இந்த மருத்துவமனைகளில் நேற்று முதல் தண்ணீர் தொட்டி அமைத்து, அதில் தண்ணீர் நிரப்பி கால்நடைகளுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. இதுகுறித்து கோவை மண்டல கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் சின்னுசாமி கூறுகையில்,‘‘சிகிச்சைக்கு வரும் கால்நடைகளுக்கு தண்ணீர் வழங்கதேவையான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தண்ணீர் தொட்டி இல்லாத மருந்தகம், மருத்துவமனைகளில் பெரிய அளவிலான வாளி, ட்ரம் வைத்து ஆடு,மாடுகளுக்கு தண்ணீரை கோடை காலம் முடியும் வரை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.