tamilnadu

img

மோடியையும், எடப்பாடியையும் வீட்டுக்கு அனுப்பும் நாள் மே 23

கோவை, மே 12–மக்கள் விரோத திட்டங்களை செயல்படுத்திய மோடியும், அதற்கு துணைபோன எடப்பாடியும் மே 23 ஆம் தேதிக்கு பிறகுவீட்டுக்கு செல்வார்கள் என கோவை சூலூர் தேர்தல் பிரச்சாரத்தில் சிபிஐ மாநில செயலாளர்இரா.முத்தரசன் தெரிவித்தார்.சூலூரில் வரும் 19ம் தேதி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக திமுக சார்பில் பொங்கலூர் நா. பழனிசாமி போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து ஞாயிறன்று தொகுதியின் பல்வேறு பகுதியில் சிபிஐ மாநிலசெயலாளர் இரா.முத்தரசன் வாக்கு சேகரிப்பு பயணத்தை மேற்கொண்டார். காமாட்சிபுரத்தில் துவங்கியபிரச்சாரத்தில் பங்கேற்று இரா.முத்தரசன் பேசுகையில், சூலூர்உள்ளிட்ட நான்கு இடங்களில் நடைபெறும் இந்த தேர்தலைவெறும்இடைத் தேர்தலாக மட்டும் பார்க்க முடியாது. இது தமிழகத்தின் தலைவிதியை மாற்றக்கூடிய தேர்தல். மத்தியில் ஆளுகிற மோடி, மக்கள் விரோததிட்டங்களை மட்டுமே செயல்படுத்திக் கொண்டு இருந்தார். குறிப்பாக தமிழகத்திற்கு எதிரான திட்டங்களை, தமிழக மக்களுக்கு துரோகம் இழைக்கக் கூடிய ஸ்டெர்லைட், மீத்தேன், நீட் போன்ற திட்டங்களை நிறைவேற்றினார். எனவே மோடியால் சாதனைகளை சொல்லி ஓட்டுக்கேட்க முடியவில்லை. மாநிலத்தின் உரிமைகளை பறிகொடுத்துக்கொண்டிருக்கிற எடப்பாடி அரசு மோடிக்கு துணை போய்க் கொண்டிருக்கிறது. எனவே, மோடியையும், எடப்பாடியையும் வீட்டுக்கு அனுப்புவது என்று மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். அந்த நிகழ்வு நடக்க இருக்கும் நாள்தான் மே 23. எனவே வரும் 19ஆம் தேதி நீங்கள் உங்களது வாக்குகளை உதயசூரியன் சின்னத்திற்கு அளித்து பொங்கலூர் நா.பழனிசாமியை தேர்வு செய்யவேண்டும் என பேசினார். இந்த பிரச்சாரத்தில் வேட்பாளர் பொங்கலூர் நா.பழனிசாமி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொருளாளர் எம்.ஆறுமுகம், மாவட்ட செயலாளர் வி.எஸ்.சுந்தரம் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.