திருப்பூர், மே 17 –திருப்பூரில் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட தம்பதியினர் திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர்காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த கிருத்திகாதேவி (23) என்ற பெண்ணும், திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவரும், தற்போது திருப்பூரில் பணி புரிந்து வருபவருமான தலித்சமூகத்தைச் சேர்ந்த அசோக் (27) என்ற இளைஞரும் கடந்த ஞாயிறன்று திருப்பூரில் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டனர். இதன்பின் தங்களுக்கு சாதி ஆணவக் கொலை அச்சுறுத்தல் இருக்கும் நிலையில் காவல் துறையினர் பாதுகாப்பு வழங்கக் கோரி அம்பேத்கார் பெரியார் கலப்புத் திருமணம் செய்தோர் நலச்சங்கத்தினர் தலைமையில் வியாழனன்று ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் பாதுகாப்பு வழங்க காவல் துறையினரை அணுகியபோது, கிருத்திகாதேவியின் குடும்பத்தினர் மட்டுமின்றி அவரது உறவினர்கள், அவர் சார்ந்த சாதி சங்கத்தினர் என50க்கும் மேற்பட்டோர் காவல் நிலையத்திற்கு வந்திருந்தனர். அவர்கள்முன்னிலையில் காவல் நிலையத்திற்குச் சென்றால் உரிய நியாயம் கிடைக்காது என்பதுடன், காவல் நிலையத்திற்கு செல்லும்போதோ, திரும்பி வரும்போதோ சாதி அமைப்பினரால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் நேரிடலாம் என மணமக்கள் கிருத்திகாதேவி அசோக் கருதியதால் வியாழனன்று காவல் நிலையத்திற்குச் செல்லவில்லை.இந்நிலையில் வெள்ளியன்று காலை 8.30 மணியளவில் கிருத்திகாதேவி, அசோக் தம்பதியர் திருப்பூர்வடக்கு மகளிர் காவல் நிலையத்தில் பாதுகாப்புக்காக தஞ்சமடைந்தனர். எனினும் பெண் வீட்டார் யாரும்காவல் நிலையத்திற்கு வராத நிலையில், மாலையில் தம்பதியரை அழைத்துச் செல்லும்படி அம்பேத்கார் பெரியார் கலப்புத் திருமணம் செய்தோர் நலச்சங்க இணைச் செயலர் செ.குணசேகரனிடம் காவல் துறையினர் கேட்டுக் கொண்டனர். அத்துடன் அவர்கள் தங்கும் இடத்தில்காவல்துறையினர் பாதுகாப்புகொடுப்பதாகவும் தெரிவிக்கப்படது. இதையடுத்து மேற்படி சங்கத்தின் கலப்பு மணத் தம்பதியர் பாதுகாப்பு இல்லத்தில் அவர்கள் தங்க வைக்கப்பட்டனர்.