அவிநாசி, மே 31-அவிநாசி பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிஐடியு வலியுறுத்தியுள்ளது.அவிநாசியில் பி.ராமமூர்த்தி நினைவரங்கத்தில் சிஐடியு பொது தொழிலாளர் சங்க மகாசபை கூட்டம் வெள்ளியன்று நடைபெற்றது. சங்கத் தலைவர் பி.கனகராஜ் தலைமை வகித்தார். மாவட்ட துணைதலைவர் பி.பாலன் மகா சபையை துவக்கி வைத்து பேசினார். செயலாளர் ஏ.ஈஸ்வரமூர்த்தி அறிக்கை சமர்பித்து பேசினார். சகோதர சங்க நிர்வாகிகள் வாழ்த்திப் பேசினர்.அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நலவாரியப் பயன்களைக் காலதாமதப் படுத்தாமல் உடனே வழங்க வேண்டும், அவிநாசி ஒன்றிய கிராமப்புறப் பகுதிகளில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். 8 மணி நேர வேலைக்கு மாதச் சம்பளம் ரூ.18 ஆயிரம் வழங்கசட்டம் இயற்றவேண்டும் என்பன உள்ளிட்டபல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் பொது தொழிலாளர் சங்கத்தின் புதிய தலைவராக ஜி.முருகன், செயலாளராக ஏ.ஈஸ்வரமூர்த்தி, பொருளாளராக ஜி.சாம்ராஜ் உள்ளிட்ட 13 பேர் கொண்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.