tamilnadu

img

தண்ணியில...!

கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிக்கு வந்த மாணவர்களை உற்சாகத்துடன் வரவேற்க அங்கே யாரும் இல்லை. ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் “ஊ” என்ற எழுத்து விடுமுறையில் காணாமல் போயிருந்தது.பள்ளி முன்வாசலில் தூக்கில் தொங்கிய தண்டவாளத் துண்டினைப் போல பள்ளியும் துருப்பிடித்து இருந்தது. முண்டாசு கட்டிய மணி தாத்தா பள்ளி துவங்குவதற்கு அடையாளமாக தண்டவாளத் துண்டில் கணகணவென சத்தம் எழுப்பியதும் மாணவர்களுக்கு மட்டும் அல்ல ஆசிரியர்களுக்கும் வயிற்றைக் கலக்குவது போலிருந்தது. மதிய உணவு இடைவேளை நேரம்.மாணவ மாணவியர் குடிநீர் தொட்டியை முற்றுகை இட்டிருந்தனர். அந்தக் காலத்தில் கட்டப்பட்ட சிமெண்ட் தொட்டி. அடியில் பொருத்தப்பட்டிருந்த இரும்புக் குழாயிலிருந்து பத்து திருகு குழாய்கள் மூலம் குடிநீர் இணைப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது. பாத்திரத்தை அரைகுறையாக கழுவிய பின்னர் குடிப்பதற்கான நீரை அதிலேயே பிடித்துக் கொண்டு ஒவ்வொருவராக விலகி வந்தனர். சாப்பிட்ட உணவை உள்ளே இறக்க வேகமாக குடிநீரைக் குடித்தவர்கள் முகம் சுளித்தனர். 

அன்னலட்சுமி கலங்கலாக இருந்த குடிநீரை ஆழமாக முகர்ந்து பார்த்தாள். அடுத்த நொடி “தண்ணியில துர்நாற்றம் அடிக்குது யாரும் குடிக்காதீங்க” என எச்சரித்தாள். தண்ணியைக் குடித்தவர்கள் என்ன செய்வது என தெரியாமல் விழித்தனர். அருகிலிருந்த பாக்கியம் “ஏய் தாயை பழிச்சாலும் தண்ணிய பழிக்காதடி” என்றாள். அன்னலட்சுமி அருகில் இருந்த குமாரிடம் “தொட்டிக்குள்ளாற எட்டிப் பாருடா” என அவசரப்படுத்தினாள்.குமார் அருகிலிருந்த வேப்ப மரத்தில் ஏறி தொட்டியின் மேல்திட்டை அடைந்தவன் அதிர்ச்சியடைந்தான். தொட்டிச் சுவர்களில் பலநாள் பாசம் படர்ந்து இலைதழைகளும் மரக்குச்சிகளும் புழுப்பூச்சிகளும் நீர் முழுக்க பரவி இருந்தது.நடுவில் என்னவோ கருப்பாய் மிதந்தது.உற்றுப் பார்த்தவன் தொட்டிக்குள் “காக்கா செத்து மிதக்குது” என அலறினான். அதைக் கேட்டதும் தண்ணீரைக் குடித்த மாணவர்கள் சாப்பிட்ட உணவுடன் சேர்த்து வாந்தி எடுக்க ஆரம்பித்தனர். ஒரு மாணவி மயக்கம் போட்டு விழுந்தாள். அன்னலட்சுமி “தண்ணியில.. தண்ணியில..” என்றவாறே தலைமையாசிரியரிடம் தகவல் தெரிவிக்க தலை தெறிக்க ஓடிக் கொண்டிருந்தாள்.