tamilnadu

img

சேலத்தில் காவல் நிலையம் அருகே ஏழு கடைகளில் அடுத்தடுத்து கொள்ளை

சேலம், மே 7- சேலம் சூரமங்கலம் காவல் நிலையம்அருகே அடுத்தடுத்துள்ள 7 கடைகளின்பூட்டை உடைத்து கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.சேலம் சூரமங்கலம் காவல் நிலையம்அருகே ஏராளமான வணிக நிறுவனங்கள், கடைகள் அமைந்துள்ளன. இந்நிலையில் திங்களன்று இரவு கடை உரிமையாளர்கள் அக்கடைகளை பூட்டி விட்டு சென்றுள்ளனர். இதையடுத்து செவ்வாயன்று காலை கடையை திறக்க உரிமையாளர்கள் வந்தபோது அங்கு அடுத்தடுத்து இருந்த 7 கடைகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு பணம் மற்றும் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கடையின் உரிமையாளர்கள் உடனடியாக அருகிலிருந்தத சூரமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.இப்புகாரை அடுத்து சம்பவ இடத்திற்குவிரைந்து சென்ற காவல்துறையினர், கொள்ளை சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கொள்ளைப்போன எலக்ட்ரானிக்ஸ் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை கொண்டு குற்றவாளிகளை தேடி வருகின்றனர். முன்னதாக, சேலம் அருகே ஓடும் ரயிலில் அடுத்தடுத்து நடைபெற்ற கொள்ளைச்சம்பவம் காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் சேலம் சூரமங்கலம் காவல் நிலையத்திற்கு மிக அருகே அடுத்தடுத்து 7 கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பொதுமக்களை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

;