உங்களைப் போலத்தான்
அவர்களுக்கும் குழந்தைகள்
இருக்கிறார்கள்...
அன்பினிய துணைவர்கள்
இருக்கிறார்கள்...
நட்பினிய நண்பர்களும்
இருக்கிறார்கள்...
உங்களைப் போலத்தான்
அவர்களும் சீரியல் பார்ப்பார்கள்
அவர்களும் தண்ணீர் பிடிப்பார்கள்
அவர்களும் வேலைக்கு செல்வார்கள்
அவர்களும் நன்றாகவே சமைப்பார்கள்
உங்களைப் போலத்தான்
அவர்களும் நாவல்களை படிப்பார்கள்
அவர்களும் நாற்று நடுவார்கள்
அவர்களும் வயலில் களை பறிப்பார்கள்
அவர்களும் பெற்றோரைப் பேணுவார்கள்
உங்களைப் போலத்தான்
அவர்களுக்கும் மாதத் தவணை உண்டு
அவர்களுக்கும் பணக் கஷ்டம் உண்டு
அவர்களுக்கும் மனக் கஷ்டமும் உண்டு
அவர்களுக்கும் எண் சாண் உடலும்
எல்லாவித உணர்வுகளும் உண்டு தான்!
ஆனால், நம்மைப் போலவே...
அவர்கள் வன்முறை பொறுப்பதில்லை
அவர்கள் விலைவாசி பொறுப்பதில்லை
அவர்கள் போதையை சகிப்பதில்லை...
அவர்கள் ஆணவக்கொலைகளையும்
பிஞ்சுகளை வேட்டையாடும் நஞ்சுகளையும்
பெண்ணடிமை பித்தர்களையும்
ஒருநாளும் மன்னிப்பதில்லை!
ஆகவே, அவர்கள் நடக்கிறார்கள்
இந்த நானிலம் அதிர நடக்கிறார்கள்!
- சூர்யா, கோவை