tamilnadu

img

கோவையில் அதிகரிக்கும் கொரோனா - தனிமைப்படுத்தும் விதிமுறைகள் மாற்றம்

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றுகள் அதிகரித்து வருவதால், தனிமைப்படுத்தல்  குறித்த விதிமுறைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

தொற்று அறிகுறியற்ற நோயாளிகள் வீட்டில் இருந்து சிகிச்சை பெறுவது தடைசெய்யப்பட்டுள்ளது. அவர்கள் குறைந்தது ஒரு வார காலம் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. 

தொற்று இருந்தாலும், காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இல்லாவிட்டாலும், அவர்கள் வீட்டில் தனிமையில் இருக்கலாம் என்ற நடைமுறை கோவை மாவட்டத்தில் இருந்து வந்தது.  இந்நிலையில், கோவை மாவட்டத்தில் தொற்று அதிகரித்து வருவதால் இந்த விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளது. சில நோயாளிகள் தொற்று இருந்தும், வீடுகளில் தனிமைப்படுத்தி கொள்வதாக கூறி தெருக்களில் உலா வருவது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், மற்றவர்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால், தொற்று உறுதி செய்யப்பட்டால், அறிகுறி இருந்தாலும், இல்லாவிட்டாலும் சிகிச்சை மையங்களில் ஒரு வாரம் தங்கி சிகிச்சை பெற வேண்டும். சோதனைகளில் நெகட்டிவ் என வந்தால் மட்டுமே வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள். அப்போதும், அவர்கள் 7 நாட்கள் தனியாக இருக்க வேண்டும். சிகிச்சை மையத்தில் 7 நாட்களும், வீட்டில் 7 நாட்கள் என 14 நாட்கள் கட்டாயம் தனிமைப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.