வாடகைக்கு இயக்கிய ரேப்பிட்டோ இருசக்கர வாகனம் பறிமுதல்
கோவை, மே 25-இருசக்கர வாகனத்தை உரிமமின்றி வாடகைக்கு இயக்கி வந்ததாக ரேப்பிட்டோ நிறுவனத்தினரை சிறை பிடித்து ஆட்டோ ஓட்டுனர்கள் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். ரேப்பிட்டோ பைக் டாக்ஸியானது கோவைமாவட்டத்தில் கடந்த ஒரு ஆண்டு காலம் செயல்பட்டு வருகிறது. ஆனால், உரிய உரிமம் இன்றி இருசக்கர வாகனத்தில் பைக் டேக்ஸி பயன்படுத்தி வருவது போக்குவரத்து விதிமீறல் என வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்தெரிவித்துள்ளது. இருப்பினும், தொடர்ந்து இந்தபைக் டேக்ஸியானது செயல்பட்டு வந்தது. இதுஆட்டோ ஓட்டுனர் மற்றும் கால் டாக்ஸி ஓட்டுனர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பைக் டேக்ஸிகளை ஆங்காங்கே ஆட்டோ ஓட்டுநர்களும், கால் டாக்ஸி ஓட்டுநர்களும் வழிமறித்து பிடித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைத்து வந்தனர். இந்நிலையில், சனியன்று ஆட்டோ ஓட்டுனர்கள் சிலர் காந்திபுரம் அருகே உள்ள ராம்நகர்பகுதியில் உரிமம் இன்றி ஓட்டி வந்த பைக் டாக்ஸிகளை சிறைப்பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
புதிய நிர்வாகிகள் தேர்வு
நாமக்கல், மே 25-நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கம் (சிஐடியு) திருச்செங்கோட்டில் கிளை அமைப்பு கூட்டம் மாவட்டக் குழு அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட குழு உறுப்பினர் டி.சி.வீரமணி தலைமை வகித்தார். சங்கத்தின் மாவட்ட செயலாளர் எம்.அசோகன் சிறப்புரையாற்றினர். இதில் சங்கத்தின் தலைவராக ஐ.ராயப்பன், துணைதலைவராக டி.சி.வீரமணி, செயலாளராக ஆர்.செந்தில்குமார், உதவிச் செயலாளராக ஜி.செல்வராஜ், பொருளாளராக பி.ராமஜெயம் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.இக்கூட்டத்தில், விசைத்தறி தொழிலில் பணிபுரியும் ஆண், பெண் இருபாலருக்கும் 75 சதவிகித கூலி உயர்வு வழங்க வேண்டும் . விசைத்தறி தொழிலாளர்களின் நலவாரியத்தில் சேர்ந்துள்ள தொழிலாளர்களுக்கு காலதாமதமின்றி பண பயன்களும் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பனஉள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.