tamilnadu

img

ரசாயன கழிவுநீரால் மாசுபடும் நிலத்தடி நீர் - விவசாயிகள் வேதனை

கோவை, மே 24 -  செஞ்சேரிமலை பகுதியில், தென்னை நார் தொழிற் சாலைகளில் பயன்படுத்திய பின் வெளியேற்றப்படும் நீரால் நிலத்தடி நீர் மாசுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.    கோவை மாவட்டம், செஞ்சேரிமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பத்துக்கும் மேற்பட்ட தென்னை நார் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த நார் தொழிற்சாலைகளிலிருந்து தென்னை நார் வெளிநாடுக ளுக்கும், பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது. இந்த தென்னை நார் தொழிற்சாலைகள் பரம்பிக்குளம் ஆழி யாறு பாசன கால்வாயின் அருகே தோப்புகளை விலைக்கு  வாங்கியுள்ளனர்.  இரவு நேரங்களில் பி ஏ பி கால்வாயில் இருந்து குழாய் மூலம் தண்ணீரை திருடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மாவட்ட நிர்வாகம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு ஏற்கனவே எழுந்து வந்தது.  

இந்நிலையில், தென்னை நார் ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் ரசாயனம் கலந்த கழிவுநீர் சுத்தகரிப்பு செய்யாமலே அருகிலுள்ள குட்டைகளில் எந்த வித அனு மதியுமின்றி தேக்கி வைக்கப்படுகிறது.இக்கழிவு நீரை சுத்திகரித்து அனுப்ப பலமுறை சொல்லியும் நிறுவனம் கண்டுகொள்ளாததால்  சுற்றுப்புறச்சுழல் சீர்கேடு அடைந்து நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதாகவும், குடிநீர் அதிக உப்புத்தன்மையுடன் இருப்பதாகவும், வாழத்தகுதியற்ற ஊராக மாறி வருவதாகவும் அப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.    மேலும், தென்னை நார் ஆலைகளில் இருந்து காற்றின் மூலமாக பரவும் கழிவுத்துகள்களால்  காய்ச்சல், சளி இருமல், ஆஸ்துமா உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு குழந்தைகள் அடிக்கடி பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். எனவே, செஞ்சேரிமலை சுற்றுவட்டாரத்தில் உள்ள தென்னை நார் ஆலைகளின்  விதிமீறல்களை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகளும், பொது மக்களும் வலியுறுத்தியுள்ளனர்.