tamilnadu

img

கப்பல் உடைக்க கார்ப்பரேட்டுகளுக்கு தாராளம்

நாடாளுமன்றத்தில் சிபிஎம் எதிர்ப்பு

புதுதில்லி, டிச. 4 - பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கொள்ளை லாபத்தை அள்ளித் தரும் கப்பல் உடைக்கும் தொழிலை தாராளமாக அனுமதிக்கும் விதமாகவே  கப்பல்கள்  மறுசுழற்சி மசோதா 2019 கொண்டு வரப்பட்டுள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்பினை பதிவு செய்தது. கப்பல்கள் மறுசுழற்சி மசோதா 2019ஐ, மத்திய கப்பல் போக்குவரத்துறை இணை அமைச்சர் மன்சுக் மண்டாவியா தாக்கல் செய்தார். இதன் மீது  டிசம்பர் 3 அன்று நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று மார்க்சிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பேசியதாவது:

கப்பல் உடைக்கும் தொழிலைப் பற்றிய இந்த மசோதாவை இப்பொழுது  விவாதிக்கிறோம். இந்த கூட்டத்தொடரி னுடைய துவக்கத்தில் தில்லியினுடைய சுற்றுச்சுழல் பாதிப்பைப் பற்றி இந்த அவை விவாதித்தது. அதன் தொடர்ச்சியாக இந்த மசோதாவையும் நாம் பார்க்க வேண்டும். முக்கியமாக வணிகத்திற்காக, லாப வேட்கைக்காக இந்திய இயற்கை வளங்களை கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு  பலி கொடுக்கிற இந்த ஆட்சியினுடைய பல மசோதாக்களின் தொடர்ச்சியாக இந்த மசோதாவை பார்க்கிறேன்.  குறிப்பாக மேற்கு உலக நாடுகள், வளர்ந்த நாடுகளில் கப்பல் உடைக்கும் தொழில்கள் பெரும்பாலும் அனுமதிக்கப்படுவதில்லை. அதற்கு காரணம் அந்த நாட்டினுடைய சுற்றுச்சூழலைப்பற்றி அங்கே இருக்கிற விழிப்புணர்வும் சட்டங்களும். ஆனால் இன்றைக்கு உலகத்தில் சுமார் 900 கப்பல்கள் ஒரு வருடத்திற்கு உடைக்கப்படு கிறது என்றால் அவற்றில் சுமார் 70% கப்பல்கள் இந்தியா பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் உடைக்கப்படுகிறது. இது இந்தியக் கடல் வளத்தை மிகப்பெரிய அளவுக்கு மாசுபடுத்துகிற ஒரு சுழலை உருவாக்குகிறது. 

இங்கே வடசென்னையை சேர்ந்த உறுப்பினர் கலாநிதி வீராச்சாமி அவர்கள் சென்னையில் ஏற்பட்டு இருக்கின்ற பாதிப்பு களை குறிப்பிட்டு இருக்கிறார். சென்னை மட்டுமல்ல, பிரதமர் மோடி அவர்களுடைய சொந்த ஊரான குஜராத்தில் உள்ளது அலாங். இந்தியாவில் உடைக்கப்படுகிற 90% கப்பல்கள் அலாங் துறைமுகத்தில் உடைக்கப்படுகிறது.  இந்தியாவில் சுற்றுச்சூழ லில் மிக மாசடைந்த நகரமாக இருக்கிற பட்டியலில் அலாங் மிக முக்கிய இடத்தில் இருக்கின்றது. தன்னுடைய சொந்த ஊரினுடைய சுற்றுச்சூழலையே சரிப்படுத்த முடியாத நிலையில் பிரதமர் மோடி இருக்கிறாரா என்ற கேள்வியை நாங்கள் இங்கு எழுப்ப விரும்புகிறோம்.  உங்கள் சொந்த ஊரினுடைய நிலைமை அப்படி இருக்கிறது. இந்தியாவின் தலைநகரின் நிலைமை இப்படி இருக்கிறது. சுற்றுச்சூழல் குறித்து மிக மோசமான நிலையை இந்தியா சந்தித்து கொண்டு இருக்கிற பொழுது இது போன்ற மசோதாக் களை நீங்கள்  கொண்டு வருவது மிக அதிர்ச்சியை உருவாக்குகிறது.  இந்த மசோதாவின் அடிப்படையில், 15 நாட்களுக்குள் அனுமதி கேட்கிறவர்களுக்கு அரசு முறையான அனுமதி கொடுக்கவில்லை என்றால் அனுமதி கொடுத்துவிட்டதாக அர்த்தம் என எடுத்துக் கொள்ளலாம் என்று சொல்கிறது. இது மிக ஆபத்தானது.  இந்தியா வில் பல இடங்களில் ஏற்பட்டு இருக்கிற சுற்றுச்சூழல் பிரச்சனைக்கு இதுபோன்ற ஆபத்தான விதிகள் காரணமாக உள்ளன. மேலும் அபாயகரமான பொருட்கள் என்று இந்த மசோதாவில் பல இடங்களில் குறிப்பிடப்பட்டு இருக்கின்றது. ஆனால் அது என்ன  அபாயகரமான பொருட்கள் என்று குறிப்பிடவில்லை.

மூன்றாவதாக, மிக முக்கியமாக இந்த சட்டத்தை மீறுபவர்களுக்கு அபராதம் ரூ.5லட்சம் அல்லது ரூ.10லட்சம் என்று நீங்கள் குறிப்பிடுகிறீர்கள். ஆனால் இந்த தொழிலிலே சம்பந்தப்பட்டது பல நூறு கோடி, ஆயிரம் கோடிகள், பல நூறு கோடி லாபம் சம்பாதிப்பவர்கள் ஐந்து லட்சம் அபராதத்தை செலுத்திவிட்டு சம்பாதிப்பதிலே எந்த வித தயக்கமும் இருக்கப் போவதில்லை. இது குஜாரத்தை சார்ந்த அல்லது சில கார்ப்பரேட்டுகளின் நலனுக்காக கொண்டு வருகிறீர்களோ என்று நாங்கள் நினைக்கிறோம்.  இறுதியாக, எந்த தனி நபரோ அரசு அதிகாரிகளோ வழக்கு தொடுக்க முடியாது என்றால் இந்த சட்டம் அப்பட்டமாக கார்ப்ப ரேட்களின் நலனுக்கானதுதான் என்பதை இங்கு சுட்டிக்காட்டி, இந்திய வளங்களை கார்ப்பரேட் நலனுக்கு அடகு வைக்கிற இது போன்ற சட்டங்களை இந்த நாடாளுமன்றம் நிராகரிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

;