tamilnadu

img

கட்டாத கழிப்பிடத்திற்கு கணக்கு காட்டி மோசடி - திருமலையாம்பாளையம் பேரூராட்சியில் முறைகேடு

கோவை, ஜூன் 4–தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கட்டாத கழிப்பிடத்தை கட்டியதாக கணக்கு காட்டி திருமலையாம்பாளையம் பேரூராட்சியில் மோசடி நடைபெற்றதாக செவ்வாயன்று பேரூராட்சி அலுவலகத்தின் முன்பு பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மதுக்கரையடுத்து திரும்பலையாம்பாளையம் பேரூராட்சி உள்ளது. இப்பேரூராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் வீடு ஒன்றிற்கு தனி நபர் கழிப்பறை கட்ட ரூ.8 ஆயிரம் மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் 700 வீடுகளுக்கு வழங்கப்பட்ட மானியம் 56 லட்சம் ரூபாய் இதுவரை சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு வந்து சேரவில்லை. மூன்று ஆண்டுகளாகியும் மானியத்தொகை வரவில்லை. இதனையடுத்து இப்பகுதி மக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்றனர். இவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் ஆர்ப்பாட்டம் நடத்தி மனு அளிப்பதற்கு அனுமதித்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள்கூறுகையில், திருமலையாம்பாளையம் பேரூராட்சியில் கழிப்பறை கட்டும் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மானியம் ரூ.56 லட்சம் இதுவரை பயனாளிகளுக்கு வழங்கப்படவில்லை. மேலும் ஒரே வீட்டிற்கு 2 கழிப்பிடம், 3 கழிப்பிடம் கட்டியதாக கட்டாத வீடுகளுக்கு கணக்கு காட்டியுள்ளனர். பல பகுதிகளில் வீட்டிற்கு 4 ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொண்டு வெறும் சுவர் மட்டுமே வைக்கப்பட்டு போலியாக கணக்கு காட்டி பணத்தை மோசடி செய்துள்ளனர். இதேபோல் மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து மக்கள் நலத்திட்டங்களுக்காகப் பெற்ற பல கோடிரூபாய் நிதியை திறம்பட கையாளவில்லை. தற்போது வருவாய் இல்லை என்று குடிநீர், சொத்துவரி போன்றவற்றை பல மடங்கு உயர்த்தியுள்ளனர். ஆகவே மக்கள் பணத்தை மோசடி செய்த அதிகாரிகளைக் கைது செய்ய வேண்டும். பயனாளிகளுக்கு வழங்க வேண்டிய மானியத்தை உடனடியாக வழங்கவேண்டும். இந்நிலை தொடருமானால் அடுத்த கட்ட போராட்டத்திற்கு தயாராவோம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.