நாமக்கல், ஜூலை 18- ஈரோடு ஜவுளி உற்பத்தியாளர்கள் 3 பேர் தொழில் நஷ்டம் காரணமாக திவால் அறிவிப்பு செய்துவிட்டு தலைமறைவாகி உள்ளார். இதனால் ரூ.20 கோடி வரை இழப்பு ஏற்பட்டதால் பள்ளிபாளையத்தில் உள்ள ஜவுளி உற்பத்தியாளர்கள் பலர் கலக்கம் அடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தில் லுங்கி துண்டு உள்ளிட்ட ஜவுளி ரகங்கள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த ஜவுளி தொழிலில் ஈடுபட்டுள்ள சுமார் 80 சதவிகிதம் பேர் ஈரோட்டில் உள்ள மொத்த வியாபாரிகளிடம் விற்பனை செய்து வந்தனர். இதில் ரொக்கத்திற்கு விற்கப்படும் ஜவுளி அளவு சுமார் 10 சதவிகிதம் மட்டுமே. மீதம் உள்ள ஜவுளிகள் 3 மாத தவணையில் கடனுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இச்சூழலில், மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு அமல்படுத்திய ஜிஎஸ்டி வரி விதிப்பின் காரணமாக ஜவுளித் தொழிலில் பெரும் பின் னடைவை சந்தித்துள்ளது. இதனால் சிறு விசைத்தறி கூடங்களில் பலவற்றில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக விசைத்தறி தொழிலாளர்கள் பலர் மாற்று பணிகளுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. விசைத்தறி தொழிலில் புதிய முதலீடுகள் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்துள்ளது இந்நிலையில் ஈரோட்டைச் சேர்ந்த மூன்று மொத்த வியாபாரிகள் கடந்த வாரம் அடுத்தடுத்து திவால் நோட்டீஸ் கொடுத்து விட்டு தலைமறைவாகி விட்டனர். இதனால் பள்ளிபாளையத்தைச் சேர்ந்த விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு மட்டுமே சுமார் ரூ.20 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே மேலும் சிலர் தொழில் நெருக்கடியில் இருப்பதால் பள்ளிப்பாளையம் ஜவுளி உற்பத்தியாளர்கள் பெரும் கலக்கத்தில் உள்ளனர். ஏற்கனவே கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கடும் நெருக்கடியில் இருந்த ஜவுளித் தொழில் தற்போது இவர்கள் திவால் அறிவிப்பால் மேலும் பின்னடைவை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.