tamilnadu

ஈரோடு மற்றும் பொள்ளாச்சி முக்கிய செய்திகள்

விளையாட்டு விடுதி சேர்க்கைக்கான தகுதி தேர்வில் 80 பேர் தேர்வு

ஈரோடு, மே 10-தமிழ்நாடு முழுவதும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக மாவட்ட வாரியாக விளையாட்டுகளில் ஆர்வமுள்ள மாணவர்களை கண்டறிந்து அவர்கள் மாவட்ட விளையாட்டு விடுதிகளில் சேர்வதற்கான தகுதி தேர்வுகள் ஈரோட்டில் வியாழனன்று நடைபெற்றது.இதற்காக, இணையம் மூலம் 108 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கான தகுதி தேர்வு ஈரோடு வஉசி மைதானத்தில் நடைபெற்றது. இதில், 57 ஆண்களும், 23 பெண்கள் என 80 பேர் தகுதி அடைந்துள்ளார். இந்த தகுதி தேர்வில் 7, 8, 11 ஆகிய வகுப்புகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பங்கேற்றனர். இவர்களுக்கு ஐந்து விதமான உடல் தகுதிகள் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் மாநில அளவிலான பெண்களுக்கான கால்பந்து தகுதித் தேர்வு வரும் 15, 16, 17 ஆகிய தேதிகளில் ஈரோட்டில் நடைபெறுகிறது. அதே தேதியில் சென்னை, திருச்சி ஆகிய பகுதிகளில் அத்தலட்டிக்ஸ் தகுதித் தேர்வுகள் நடைபெறுகிறது. இதில் தேர்ச்சி பெறும் மாணவ மாணவியர்கள் தகுதிஅடிப்படையில் விருப்பப்பட்ட விடுதிகளில் சேர்த்துக் கொள்ளப்படுவர் என ஈரோடு மாவட்ட விளையாட்டு அலுவலர் தெரிவித்துள்ளார்.


பொள்ளாச்சி பாரதியார் பல்கலை. கல்லூரியில் தரவரிசைப் பட்டியல் வெளியீடு

பொள்ளாச்சி, மே10-பொள்ளாச்சி பாரதியார் பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் அறிவியல் (உறுப்பு) கல்லூரியில் மாணவர்சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெள்ளியன்று வெளியிடப்பட்டுள்ளது.கோவை மாவட்டம் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் சமத்தூர் இராம ஐயங்கார் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் அறிவியில் உறுப்புக் கல்லூரியில் 2019- 2020ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியலை கல்லுரியின் முதல்வர் கிருஷ்ணராஜ் (பொறுப்பு)  வெளியிட்டார். இக்கல்லூரியில் இந்தாண்டு வழங்கப்பட்ட மொத்தம் 967 விண்ணப்ப படிவங்களில், 768 விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதில் பி.ஏ.(ஆங்கிலம்), பி.எஸ்.சி (கணிதம்), பிபிஏ, பி .காம்(சி.ஏ), பி.காம்(பிஏ) உள்ளிட்ட 5 பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு கூட்டமானது வருகின்ற 13 ம் தேதி திங்களன்று நடைபெற உள்ளது. இதில் தொழில்முறை படிப்பு( வணிகவியல்) மாணவர்களுக்கான கலந்தாய்வு மே 13ல் திங்களன்று காலை 9.00 மணி முதல் 10.00 மணி வரையும், சிறப்பு ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு அதாவது மாற்றுத்திறனாளிகள் மற்றும் விளையாட்டு வீரர்கள், முன்னாள் இராணுவத்தினர் வாரிசுகளுக்கு காலை 10.00 மணி முதல் 11.00. மணி வரையும் நடைபெறும். அதன் பின்னர் தரவரிசைப் பட்டியலிலுள்ள 1 லிருந்து 200 வரையில் உள்ளவர்களுக்கானவிண்ணப்பதாரர்களுக்கு காலை 11.00 மணியிலிருந்து மதியம் 1.30 மணி வரையும் நடைபெறும். பின்னர் தரவரிசைப்பட்டியலிலுள்ள 201 முதல் 400 வரையிலான விண்ணப்பத்தாரர்களுக்கு மே-14 செவ்வாயன்று காலை 11. 00 மணியிலிருந்து கலந்தாய்வு நடைபெறும். பின்னர் 15-05-2019 புதனன்று 400 முதல் 584 வரை உள்ளவர்களுக்கான கலந்தாய்வு காலை 10 மணியிலிருந்து மாலை 4 மணி வரை நடைபெறும் என கூறினார். மேலும் கலந்தாய்வில் பங்கு பெறும் மாணவர்கள் தங்களின் பெற்றோர்களுடன் மாணவர் சேர்க்கைக்கு தேவையான அனைத்து மூலச்சான்றிதழ்களும், மற்றும் அவற்றின் மூன்று நகல்களுடன், மாணவர்களின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 5 மற்றும் உரிய கட்டணத் தொகையுடன் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.