tamilnadu

img

குடிநீர், அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி தர்ணா

அவிநாசி, மே 14-அவிநாசி அடுத்த வஞ்சிபாளையம் பகுதியில் முறையாக குடிநீர் வழங்கவும், அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பொதுமக்கள் சார்பில் திங்களன்று நடைபெற்ற தர்ணா போராட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்ததால் பொதுமக்கள் ஆவேசமடைந்தனர்.புதுப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட வஞ்சிபாளையம் பகுதியில் சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி மக்களுக்கு மேட்டுப்பாளையம் ஆற்று குடிநீர் வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில் மூன்று மாதங்களாக இந்த ஆற்று குடிநீர் சரி வர விநியோகிக்கப்படவில்லை. மேலும் எல்அன்டி தண்ணீரும் முறையாக வழங்கப்படவில்லை. இந்நிலையில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்புகள் வழங்க வேண்டும். தெக்கலூர் பிரிவு முதல் வஞ்சிபாளையம் பள்ளி வரையும், பொன்ராமபுரம் முதல் வஞ்சிபாளையம் மெயின் ரோடு வரை முறையான சாக்கடை வசதி இல்லை. வெங்கமேடு ஏடி காலனி, முத்தரையர் காலனி பகுதி முழுவதும் சாக்கடை, சாலை வசதி செய்து கொடுக்க வேண்டும். மேலும் வஞ்சிபாளையம், காலேஜ் சாலை, இரட்டைத் பாலம், நத்தகாடு, அவிநாசி முதல் மங்களம் செல்லும் சாலையில் இருந்து கிணற்று காடு மதுரா நகர் வழியாக முருகம்பாளையம், கன்னிமார் மாகாளியம்மன் கோவில், எல்லை பிள்ளையார் கோவில், செல்லாண்டியம்மன் கோவில், சாம் சாமந்தன்கோட்டை, மேற்கு வஞ்சிபாளையம், கரட்டுமேடு, சௌடாம்பிகா நகர், வின்னர் பேக்கரி, கிரேஸ் கார்டன், நல்லிகவுண்டம்பாளையம் ஏடி காலனி, காமநாயக்கன்பாளையம் ஏ டி காலனி, புதுப்பாளையம் ஏடி காலனி ஆகிய பகுதிகளில் முறையான தார் சாலைகள் அமைத்து தரவேண்டும். புதுப்பாளையம் ஏடி காலனியில் சாக்கடை கால்வாய் அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி வஞ்சிபாளையம் பேருந்து நிறுத்தத்தில் புதுப்பாளையம் ஊராட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது

இந்தப் போராட்டத்திற்கு மோகன சுந்தரம் தலைமை தாங்கினார். எம்.ராமகிருஷ்ணன், எம்.செல்வராஜ், ஆறுமுகம், கே.பாலசுப்பிரமணியம், குமாரவேல், கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ரங்கராஜ் மாவட்டக்குழு உறுப்பினர் பி.முத்துச்சாமி, ஒன்றியச் செயலாளர் எஸ்.வெங்கடாசலம், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் முருகன், ஒன்றியக் குழு உறுப்பினர் ஆர்.பழனிச்சாமி உள்ளிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பொதுமக்களும் தர்ணா போராட்டத்திற்கு ஆயத்தமாகி கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பூண்டி காவல்துறையினர், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் தர்ணா போராட்டத்திற்கு அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதையடுத்துஅங்கு கூடியிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும், பொதுமக்களும் காவல்துறைக்கு எதிராகவும், குடிநீர், சாக்கடை வசதிகள் செய்து தரக்கோரியும் முழக்கங்கள் எழுப்பினர். இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பொதுமக்களிடம் பூண்டி காவல்துறையினர் பேச்சுவார்த்தைக்கு  ஏற்பாடு செய்தனர். இப்பேச்சுவார்த்தை அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் குடிநீர் வழங்கல் அதிகாரி சேவியரும் கலந்து கொண்டார். இப்பேச்சுவார்த்தையில் அதிகாரி சேவியர் அலட்சியப்போக்குடன் நடந்து கொண்டார். இதில் ஆவேசமடைந்த பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியியினர் அதிகாரி சேவியரை முற்றுகையிட்டனர். காவல்துறையினர் தலையீடு செய்து அதிகாரி சேவியரை எச்சரித்தும், பொதுமக்களை அமைதிப்படுத்தினார். இதையடுத்து காவல்துறை அதிகாரி, குடிநீர் வடிகால் வாரிய உயர் அதிகாரிக்கு கைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் 10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகிக்கப்படும் என உறுதியளித்தனர். மேலும், உடனடி தேவைக்காக செவ்வாய்க்கிழமை இரவுக்குள் குடிநீர் வழங்கப்படும் என தெரிவித்தனர். மற்ற பிரச்சனைகள் வரும் நாட்களில் பேசி தீர்க்கப்படும் என தெரிவித்தனர். இதையடுத்து அங்கிருந்த பொதுமக்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் கலைந்து சென்றனர். 

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினரும், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான பி.முத்துசாமி கூறுகையில், கோடைகாலம் என்பதால் குடிநீருக்கு மிகப்பெரிய பற்றாக்குறை நிலவுகிறது.புதுப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட வஞ்சிபாளையம் பகுதியில் தினந்தோறும் ஆற்று குடிநீர் 80 ஆயிரம் லிட்டர் மட்டுமே வருகிறது. ஆனால் இப்பகுதிக்கு தேவையான குடிநீர் இரண்டு லட்சத்து 80 ஆயிரம் லிட்டராகும். இந்நிலையில் மாதம்தோறும் குடிநீர் கட்டணத்தை முறையாக பஞ்சாயத்து வசூலிக்கப்படுகிறது. மேலும் எல்ஆன்டி தண்ணீரும் முறையாக கிடைப்பதில்லை. இதேபோல் முறையான சாலைகள் வசதிகள் இல்லை. புதுப்பாளையம் ஊராட்சியில் சாக்கடை கால்வாய்கள் இல்லை. மங்கலத்தில் இருந்து அவிநாசி செல்லும் சாலையில் தரைமட்ட பாலம் கட்டப்பட்டு இரண்டு மாதங்களிலே இடியும் நிலையில் உள்ளது. இத்தகைய அவலங்கள் நிறைந்த புதுப்பாளையம் ஊராட்சியை கண்டித்து தர்ணா போராட்டம் ஏற்பாடு செய்திருந்தோம். இந்நிலையில் காவல்துறை அதிகாரி பேச்சுவார்த்தை அடிப்படையில், தர்ணா போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறோம். இந்தப் பிரச்சனை நீடித்தால் மீண்டும் தொடர் போராட்டம் நடத்த உள்ளோம் என தெரிவித்தார்.