tamilnadu

img

கோவில் திருவிழாவில் தலித், அருந்ததியர்கள் புறக்கணிப்பு

ஈரோடு, மே 29-ஈரோடு அருகே கோவில் திருவிழாவில் பங்கேற்க தலித் மற்றும் அருந்ததியர் சமூக மக்களுக்கு சாதிய ஆதிக்கசக்தியினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தீண்டாமை ஒழிப்பு முன்னணிஉள்ளிட்ட அமைப்புகளின் கடும் போராட்டத்திற்கு பிறகு அனுமதியளிக்கப்பட்டது.ஈரோடு மாவட்டம், கொடுமுடி வட்டம், எழுநூற்றிமங்கலம், ராசாம்பாளையத்தில் மாரியம்மன்-பொன்னாத்தியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலானது இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. முன்னதாக, இந்த கோவிலின் திருவிழாவை சாதிய ஆதிக்க சமூகத்தை சேர்ந்தவர்கள் முன்னின்று நடத்துவதால் அப்பகுதியைச் சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் அருந்ததியர் சமூகத்தினரை கோவிலின் உள்ளே அனுமதிக்க மறுத்து வந்துள்ளனர்.இதுதொடர்பாக கடந்த  2014 ஆம் ஆண்டு பிரச்சனை ஏற்படவே கோட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தி அனைத்து சமூகத்தினரும் வழிபாடு நடத்தலாம் என்று உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்தே அனைத்து சமூகத்தினரும் இணைந்து கோவில் திருவிழா மற்றும் வழிபாட்டை மேற்கொண்டு வந்தனர். அதுவும், முதல்நாள் திருவிழாவில் சாதிய ஆதிக்க சமூகத்தை சேர்ந்தவர்களும், அடுத்தநாள் ஆதிதிராவிடர் மற்றும் அருந்ததிய சமூகத்தினரும் வழிபாடு நடத்திவந்தனர். இத்தகைய சாதிய பாரபட்சத்திற்கு தொடர்ந்து எதிர்ப்புகள் எழுந்து வந்தன. இந்நிலையில் இக்கோவிலில் அக்கினி நட்சத்திர பூஜை திருவிழா கடந்தமே 26 ஆம் தேதி துவங்கி மே 28 ஆம் தேதி வரை நடைபெற்றது. இச்சூழலில், இந்த ஆண்டு ஆதிதிராவிடர் மற்றும் அருந்ததிய சமூகத்தினர் திருவிழாவில் பங்கேற்பதை தடுக்கும் வகையில் சாதிய ஆதிக்க சமூகத்தை சேர்ந்தவர்கள் தங்களது பட்டா நிலத்தில் வழிபாடு நடத்துவது என்றும்,  மாரியம்மன் திருவிழா என்பதற்கு பதில் கும்பம் என்ற பெயரில் திருவிழாவை நடத்தவும் முற்பட்டனர். இந்த செயல் அப்பகுதியைச் சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் அருந்ததிய சமூகத்தினர் மத்தியில் கடும் அதிருப்தியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட அமைப்பினர் தலையிட்டு கோட்டாட்சியர் முருகேசன் மற்றும் இந்து அறநிலைய ஆய்வாளர், கொடுமுடி காவல் ஆய்வாளர் உள்ளிட்டோரிடம் முறையிட்டனர்.

இதில் ஊருக்குள் ஓர் மாரியம்மன் இருக்க, சாதிய ஆதிக்க சக்தியினர் தனியாக பட்டா நிலத்தில் மாரியம்மன் திருவிழா நடத்துவது என்பது தீண்டாமையின் புதிய வடிவம். அரசியல் சட்டம் கோவிலில் வழிபாடு செய்ய அனைத்து சமூகத்தினருக்கும் அனுமதி அளிக்கிற நிலையில், பட்டியல் இனத்தவர்களை புறக்கணிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. அரசு நிர்வாகம் இத்தகைய தீண்டாமை கொடுமையை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி பேசினர்.இதையடுத்து கோட்டாட்சியர் முருகேசன் முன்னிலையில் இருதரப்பினருக்கும் இடையே இரண்டு கட்டமாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் ஆதிதிராவிடர் மற்றும் அருந்ததியர் சமூகத்தினருடன் இணைந்துதிருவிழாவை நடத்துவதற்கு சாதியஆதிக்க சமூகத்தினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து பேச்சுவார்த்தையின் முடிவில் கோட்டாட்சியர், இனிமேல் இக்கோவிலை இந்து சமயஅறநிலையத்துறை தான் நிர்வகிக்கும். ஆகவே, உடனடியாக பட்டியல்இன மக்களை வழிபாடு செய்ய அனுமதித்திட வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், அடுத்த ஆண்டு முதல் பட்டா நிலத்தில் திருவிழா நடத்த வேண்டும் என்றால் நீதிமன்றஉத்தரவு பெற வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இந்த உத்தரவை தொடர்ந்து ஆதிதிராவிடர் மற்றும்அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பெரும் உற்சாகத்தோடு மாவிலக்கு எடுத்து கோவிலில் வழிபட்டனர்.இந்நிகழ்வின்போது, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செயலாளர் பி.பழனிசாமி, தாலுகா தலைவர் டி.தங்கவேல், செயலாளர் சிவலிங்கம், சிபிஎம் மொடக்குறிச்சி கொடுமுடி தாலுகா செயலாளர் கே.பி.கனகவேல், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் ஆர். கலைசெல்வன், வே.மதிவாணன், பழனிசாமி, இளையராஜா, தமிழ் புலிகள் கட்சியின் விஸ்வநாதன் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் அருந்ததியர் சமூகத்தைச்சேர்ந்தவர்கள், ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.