tamilnadu

img

கோவை: இரட்டை கொலை வழக்கில் அனுமான் சேனா நிர்வாகி உள்ளிட்ட இருவர் கைது

 கோவை, மே 22-கோவை போத்தனூர் அருகேமுன் விரோதத்தில் 2 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அகிலபாரத அனுமன் சேனா மாவட்டசெயலாளர் உள்ளிட்ட இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.கோவை அருகே போத்தனூர் செட்டிபாளையம் சாலை ஸ்ரீராம் நகரைச் சேர்ந்தவர் ஜான் பிரிட்டோ (28) பெயின்டர். இவர் திங்களன்று தனது நண்பர் பிரவீன்ராஜ் என்பவருடன், இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது, போத்தனூர் அருகேமேட்டுத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த காட்வின்ராஜ் (30), ராபின் (28), குட்டி என்கிற நித்யக்குமார்(37) ஆகியோருக்கும், ஜான் பிரிட்டோவுக்கும் முன்விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது.இதில், ஆத்திரமடைந்த ஜான் பிரிட்டோ, கத்தியால் காட்வின்ராஜை கத்தியால் குத்தினார். இதில், காட்வின்ராஜ் படுகாயம் அடைந்தார். இதையடுத்து, காட்வின்ராஜ், ராபின், நித்யக்குமார் மூவரும் இருசக்கர வாகனத்தில் விரட்டிச் சென்று, ஜான் பிரிட்டோவை அவரது வீட்டின் அருகே சரமாரியாகக் கத்தியால் குத்தினர். இதில் ஜான் பிரிட்டோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து 3 பேரும் அங்கிருந்து தப்பினர். ஜான் பிரிட்டோ குத்தியதில் படுகாயம் அடைந்திருந்த காட்வின்ராஜ் வலியால் துடித்ததைத் தொடர்ந்து, சுந்தராபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக அனுமதித்து விட்டு ராபின், நித்யக்குமார் இருவரும் தலைமறைவானார்கள். போத்தனூர் காவல்துறையினர் வழக்குப் பதிந்து அவர்களைத் தேடி வந்தனர். இந்நிலையில், காட்வின்ராஜ் சிகிச்சை பலனின்றி செவ்வாயன்று இறந்தார். இதனையடுத்து தலைமறைவாக இருந்த ராபின், நித்யக்குமாரை செவ்வாயன்று இரவு காவல்துறையினர் கைது செய்தனர். இதில் ராபின் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நித்யகுமார் என்பவர் அகில பாரதஅனுமன் சேனாவின் மாவட்ட செயலாளராக உள்ளார். இதுகுறித்து கைதான இருவரும் அளித்த வாக்குமூலத்தில் ஜான் பிரிட்டோ, காட்வின்ராஜ் இடையே முன்விரோதம் இருந்தது. இருவரும் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தனர். சம்பவத்தன்று ஆட்டுத்தொட்டி பகுதியில் காட்வின்ராஜூடன் நாங்கள் சாலையோரத்தில் நின்று பேசிக் கொண்டிருந்தோம். அப்போது, அங்கு வந்தஜான் பிரிட்டோ, காட்வின் ராஜூவைவம்பிழுத்துத் தகராறு செய்தார். எதிர்த்துப் பேசியதால், காட்வின்ராஜை கத்தியால் குத்தி விட்டுத் தப்பினார். எங்கள் நண்பரைக் குத்தியதால், பழிக்குப் பழி வாங்கவே, துரத்திச்சென்று ஜான் பிரிட்டோவை குத்திக்கொன்றோம். இவ்வாறு வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர். இதையடுத்து ராபின், நித்யக்குமார் இருவரையும் காவல்துறையினர் ஜே.எம் 7 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.