tamilnadu

லஞ்ச ஒழிப்பு காவலர் எனக் கூறி  நூதன மறையில் பணப்பறிப்பு

 கோவை, ஜூலை 18- லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் எனக் கூறி கேரள வியாபாரியிடம் 13 லட்சம் ரூபாய் பணத்தைப் பறித்துச் சென்ற கும்பலை காவல் துறையினர் தனிப்படை அமைத்து தீவிரமாகத் தேடி வருகின்றனர். கேரள மாநிலம் தலச்சேரி பகுதியைச் சேர்ந்த நவ்ஷாத் என்பவரின் நண்பரான விக்னேஷ் என்பவர் குறைந்த விலைக்கு தங்கம் வாங்கித் தருவதாகக்கூறி கோவைக்கு அழைத்து வந்துள்ளார். மேலும், இவர்கள் இருவரும் உக்கடத்தில் இருந்து ஆட்டோ மூலம் சிவானந்தா கால னிக்கு வந்தனர். இந்நிலையில், சிவானந்தா காலனியில் சிவா என்பவரை சந்தித்தபோது, அவர் அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த ஒரு காரைக் காண்பித்து, அதில் வியா பாரிகள் இருக்கிறார்கள் என கூறியுள்ளார்.  இதையடுத்து, அவர்கள் இருவரும் காருக்குள் சென்ற போது உள்ளே இருந்து நபர்கள் தங்களை விஜிலென்ஸ்  அதிகாரிகள் என அறிமுகப்படுத்திக் கொண்டு, பணத்தைத்  தரும்படி கேட்டனர். அதில், ஒருவர் காவல்துறையினரின் சீருடையில் இருந்ததால், அதனை நம்பிய நவ்ஷாத், தனது கையிலிருந்த பணப்பையை அவர்களிடம் கொடுத்துள்ளார்.  இதையடுத்து, விசாரிப்பது போல காரில் சுற்றித் திரிந்த அந்த கும்பல் திடீரென இருவரையும் காரிலிருந்து இறக்கி விட்டு தப்பியுள்ளனர். இந்நிலையில், அதிர்ச்சிய டைந்த நவ்ஷாத் மற்றும் விக்னேஷ் உடனடியாக ரத்தினபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ரத்தினபுரி காவல் துறையினர் சிவானந்தா காலனி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு 4 தனிப்படைகள் அமைத்து விசாரித்து வருகின்றனர்.