tamilnadu

img

8 வழிச் சாலை தடையை எதிர்த்து மேல்முறையீடு

இடையிலான 8 வழிச் சாலை திட்ட தடையை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளதை கண்டித்து சேலத்தில் வெள்ளியன்று விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.சேலம்- சென்னை இடையே ரூ.10 ஆயிரம் கோடி மதீப்பிட்டில் எட்டு வழிச் சாலை அமைக்க மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்து அதற்காக நிலங்களை கையகப்படுத்தும் பணியை அதிகாரிகள் துவக்கினர். ஆனால், இத்திட்டத்தால் ஆயிரக்கணக்கான ஹெக்டர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் எனக்கூறி நிலம் கையகப்படுத்தும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆங்காங்கே விவசாயிகள் தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வந்தனர். இருப்பினும், இத்திட்டத்தை நிறைவேற்றியே தீருவது என்ற அடிப்படையில் விவசாய நிலங்களை வலுக்கட்டாயமாக கையகப்படுத்தும் பணிகளை அரசு அதிகாரிகள் மேற்கொண்டனர். இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், எட்டு வழி சாலை திட்ட பணிகளுக்காக நிலத்தை கையகப்படுத்த தடை விதித்திருந்தது. இதனால் நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட திட்டப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் சேலம்- சென்னை இடையிலான எட்டு வழிச் சாலை திட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து வெள்ளியன்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனு வருகின்ற திங்களன்று விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  தமிழக அரசின் இந்த மேல்முறையீட்டை கண்டித்துசேலம்மாவட்டம், பூலாவரி பகுதியில் சேலம்- சென்னை இடையிலான எட்டு வழிச் சாலை திட்டத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கருப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்த ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான தமிழக அரசை கண்டித்து கண்டன முழுக்கங்களை எழுப்பினர்.  இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.

பழிதீர்க்கும் நடவடிக்கை ? 

இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் கூறுகையில், தற்போது நடந்துமுடிந்த தேர்தலில் தமிழகத்தை ஆளுகின்ற எடப்பாடி அரசு படுதோல்வி அடைந்துள்ளது. இதனால் தமிழக மக்களையும், விவசாயிகளையும் பழிதீர்க்க வேண்டும் என நினைத்து சேலம்- சென்னை இடையிலான எட்டு வழிச் சாலை திட்டம் தொடர்பாக மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. தங்களிடம் ஆட்சியும், அதிகாரமும் கையில் உள்ள ஆணவத்தில் தொடர்ந்து தமிழக மக்களையும், விவசாயிகளையும் பழிவாங்கும் நடவடிக்கையில் இந்த ஆட்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அதற்கு ஒரு எடுத்துக்காட்டாக தான் தற்போது இந்த எட்டு வழிச் சாலை திட்டத்திற்கு மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகம் சுடுகாடாக மாற்றுவதற்காகவே இவர்கள் மேல்முறையீடு செய்துள்ளனர். தமிழக அரசின் இந்த மேல்முறையீடு முடிவினை வன்மையாக கண்டிக்கிறோம். தமிழக அரசு மேற்கொள்ளும் அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் எதிர்த்து நாங்களும் உச்ச நீதிமன்றம் செல்வோம் என ஆவேசமாக தெரிவித்தனர்.