tamilnadu

வாக்கு எண்ணும் மையத்தில் அனைத்து ஏற்பாடுகளும் தயார்

ஈரோடு,மே 22-ஈரோட்டில் நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்கு எண்ணும் மையமான போக்குவரத்து பொறியியல் கல்லூரியில் அனைத்து ஏற்பாடுகளும் தயார்நிலையில் இருப்பதாக மாவட்டஆட்சியர் சி.கதிரவன் தெரிவித்துள்ளார்.ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஈரோடு மேற்கு, ஈரோடு கிழக்கு, மொடக்குறிச்சி, குமாரபாளையம், காங்கயம் மற்றும் தாராபுரம் (தனி) ஆகிய 6 தொகுதிக்குட்பட்ட 1678 வாக்குச்சாவடி மையங்களில் ஏப்.18 மற்றும் மே 19 ஆகிய தேதிகளில்நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போது பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு வரப்பட்டு, ஈரோடு மாவட்டம் சித்தோடு சாலைப் போக்குவரத்து பொறியியல் கல்லூரியில் மூன்று அடுக்கு பாதுகாப்புடன் தனி அறையில் சட்டமன்றத் தொகுதிவாரியாக வைக்கப்பட்டுள்ளது.இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டபடி வியாழனன்று (மே 23) ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, தாராபுரம், காங்கேயம், குமாரபாளையம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் ஈரோடு மாவட்டம், சித்தோடு, சாலை, போக்குவரத்து பொறியியல் கல்லூரியில் எண்ணப்படுகிறது. இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைபடி, வாக்கு எண்ணும் மையத்தில் பல்வேறு வகையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, வாக்கு எண்ணும்நாளன்று காலை 8 மணியளவில் தபால் ஓட்டுகளும், 8.30 மணியளவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர ஓட்டுகளும் எண்ணும் பணி நடைபெறும். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளிலும் தலா 17 கண்காணிப்பாளர்கள், 17 உதவியாளர்கள், 17 நுண் பார்வையாளர்கள், 15 அலுவலக உதவியாளர்கள் மற்றும் 10 தொழில்நுட்ப உதவியாளர்கள் என மொத்தம் 456 அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எண்ணும்பணிக்கும், மேலும் தபால் வாக்குகள் எண்ணும் பணிக்கு 37 அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.வாக்கு எண்ணிக்கை சுமார் 24 சுற்றுகள் வரை எண்ணப்படும். ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 14 மேசைகள் அமைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறும். வாக்கு எண்ணும் மையத்தில் சுமார் 100 கண்காணிப்பு கேமராக்களும், 96 வெப் கேமராக்களும், அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் வீடியோ ஒளிப்பதிவாளர்களும் பணியமர்த்தப்பட உள்ளனர். பாதுகாப்பு பணிக்கென துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 2 ஆய்வாளர்கள், 21 துணை ஆய்வாளர்கள் என மொத்தம் 133 காவல் துறையினர் சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் வாக்கு எண்ணும் மையத்திற்குள் இந்திய தேர்தல்ஆணையம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டை உள்ளவர்கள்மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். 2 சக்கர வாகனங்கள் மற்றும்கைபேசிகளுக்கு அனுமதி இல்லை. மேலும் அனுமதிக்கப்பட்ட 4 சக்கர வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. வாக்குஎண்ணும் மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களுடன் ஒரு சட்டமன்ற தொகுதி வீதம்தலா ஒரு முதன்மை முகவர் மற்றும் 16 முகவர்கள் என மொத்தம் 800 நபர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். மேலும் 10 நபர்கள்கொண்ட மருத்துவ குழு, தீயணைப்பு வாகனம், தேவையான அளவு குடிநீர் வசதி என அனைத்து விதமான ஏற்பாடுகளும் வாக்குஎண்ணும் மையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது என ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சி.கதிரவன் தெரிவித்துள்ளார்.