கோவையில் அதிமுக கொடி கம்பம் சரிந்து விழுந்ததால் லாரி மோதி இளம்பெண் விபத்துள்ளன சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி என்கிற அனுராதா. 30 வயதான இவர் சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று காலை பணிக்கு செல்வதற்காக, ராஜேஸ்வரி தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.அந்தப் பகுதியில் உள்ள அதிமுக பிரமுகர் யோகா மாஸ்டர் சுவாமி போமிவர்தன் தாமரை இல்ல திருமணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதற்காக, அவிநாசி சாலையின் ஒரு பகுதி முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு அதிமுக கொடி கம்பங்களும் வைக்கப்பட்டுள்ளன. சாலையோரத்தில் நடப்பட்டு இருந்த அதிமுக கொடி கம்பம் ராஜேஸ்வரி செல்லும்போது சரிந்து விழுந்தது. இதையடுத்து அவர் சடன் பிரேக் போட்டதில் சறுக்கி விட்டு விபத்து ஏற்பட்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதனை காவல் துறையினர் மறைப்பதாகவும் ராஜேஸ்வரியின் உறவினர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இந்நிலையில் படுகாயம் அடைந்த ராஜேஸ்வரிக்கு காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து இன்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி”பேனர் வைக்கக் கூடாது என்பதுதான் நீதிமன்ற உத்தரவு; கொடிக்கம்பம் வைப்பது தொடர்பாக உத்தரவு எதுவும் இல்லை. கோவையில் அதிமுக கொடிக்கம்பத்தால் பெண் விபத்தில் சிக்கியதாக இதுவரை தகவல் வரவில்லை” என்று தெரிவித்துள்ளார்.