பெய்ஜிங்
உலக நாடுகளைக் கதிகலங்க வைக்கும் புதிய ஆட்கொல்லி வைரஸான கொரோனா வைரஸ் சீனாவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் சத்தமில்லாமல் பரவிவரும் கொரோனா வைரஸ் ஈரான், தென் கொரியா போன்ற நாடுகளில் பலத்த சேதாரத்தை விளைவிக்கத் தயார் நிலையில் உள்ளது.
இந்நிலையில், பிரபல சீன நடிகரான ஜாக்கிசான் போலீஸ் அதிகாரியின் ஓய்வு பெறும் விழாவில் கலந்துகொண்டுள்ளார். இந்த விழாவில் பங்கேற்ற போலீஸ் அதிகாரி ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்க விழாவில் கலந்துகொண்ட ஜாக்கி சான் உட்பட 60 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அந்த கூட்டத்தில் உள்ள ஒருவர் இந்த செய்தியை லீக் செய்ய, அது வேறு விதமாக அதாவது ஜாக்கிசானுக்கு கொரோனா பாதிப்பு உள்ளது என வதந்தியாகப் பரவியுள்ளது. இந்த செய்தியைக் கேட்ட அவரது ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்தனர்.
இந்த விவகாரம் குறித்து நடிகர் ஜாக்கி சான் இன்ஸ்டாகிராமில் விளக்கம் அளித்துள்ளார். அதில்,"என்னைப் பற்றிக் கவலைப்பட்ட அனைவருக்கும் நன்றி. நான் பத்திரமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறேன். என்னை எங்கும் அடைத்து வைக்கவில்லை. தயவு செய்து யாரும் கவலைப்படாதீர்கள். மற்ற அனைவரும் பத்திரமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கவேண்டும். எனக்கு உலகம் முழுவதிலிருந்தும் பலவிதமான பரிசுப் பொருட்களை அனுப்பிய அனைவருக்கும் நன்றி. அதில் நிறைய மாஸ்குகளும் (முகக்கவசம்) இருந்தது மகிழ்ச்சியான செய்தி. அவற்றையெல்லாம் என் நிறுவனத்திடம் சொல்லி தேவையானவர்களுக்குக் கொடுக்கச் சொல்லியிருக்கிறேன்”எனக் கூறியுள்ளார். ஜாக்கி சானின் விளக்கத்தின் மூலம் அவரது ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.