பிரிடோரியா, மே 2- கொரோனா ஊரடங்கால் உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கும் சூழலில், தென்னாப்பிரிக்காவில் உணவுக்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்னாப்பிரிக்காவின் பிரிடோரியா நகரத்தின் சுற்று வட்டாரப் பகுதிகளில், ஜிம்பாப்வே, மொசாம்பிக், மலாவி, கேமரூன் ஆகிய நாடுகளிலிருந்து வந்து குடியேறிய ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் அவர்களுக்கு அரசு உதவ முன்வராததால், தொண்டு நிறுவனங்கள் உணவுகள் வழங்கி வருகின்றன.
சமூக ஆர்வலர் யூசுப் ஆபிராம்ஜி என்பவர் தான் உணவுகளை வழங்கியவர். அவர் கூறுகையில், ஊரட ங்கால் மக்கள் உணவின்றி தவிக்கின்றனர். அவர்களுக்கு நான் செய்த உதவி ‘கடலில் ஒரு துளி’ போன்றது என்றார். கிட்டத்தட்ட எட்டாயிரம் பேருக்கு அவர் உணவு வழங்கினார். உணவுப் பொட்டலங்களைப் பெற மக்கள் நான்கு கிலோ மீட்டர் தூரத்திற்கு காத்திருந்தனர். அவர்களுக்கு அரசாங்கத்திடம் எந்த உதவியும் கிடைக்கவில்லை. நாங்கள் ஒரு சிறு உதவி செய்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்றனர் சில சமூக ஆர்வலர்கள்.