tamilnadu

img

தலைசாய்க்க ஒரு இடம் இருக்கா 2,14,762 குடும்பங்களின் கண்களில் ஆனந்தக் கண்ணீரை பார்த்துவிட்டோம் பினராயி விஜயன் பெருமிதம்

திருவனந்தபுரம், மார்ச் 1- ‘என் வீடு’ என்கிற உரிமையுடன் கண்ணியமான வாழ்க்கையின் அடித்தளத்தில் காலடி வைத்தன லட்சக்கணக்கான குடும்பங்கள். சமையலறையில் பொங்கி வழிந்தது பால் கலசங்கள் மட்டுமல்ல ஆனந்தம் நிரம்பிய கண்களும்தான். ஒருபோதும் நிறைவேறாது என்று கருதிய கனவு மெய்யான அதிசயத்தை நம்ப முடியாத முகங்கள்.  அனைவருக்கும் வீடு என்கிற லட்சியக் கனவை நோக்கி பாய்ந்து செல்லும் கேரளத்தில் திருவிழா காட்சிகளை அனைத்துப் பகுதியிலும் சனியன்று காண முடிந்தது. அனைத்து மாவட்டங்களிலும் பயனாளிகளின் சங்கமத்தில் பெருமளவில் மக்கள் திரண்டிருந்தனர். உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்களின் தலைமையில் நூற்றுக்கணக்கான இடங்களில் இந்த சங்கமம் சனியன்று நடைபெற்றது.  மாநில அளவில் 2 லட்சம் வீடுகள் என்கிற அறிவிப்புக்காக திறந்த வாகனத்தில் திருவனந்தபுரம் புத்தரிக்கண்டம் மைதானத்துக்கு வந்த முதல்வரை பல்லாயிரக்கணக்கான பயனாளிகளும் பொது மக்களும் கரவொலியுடன் வரவேற்றனர். நிகழ்ச்சியில் முதல்வர் பினராயி விஜயன் பேசியதாவது: 2,14,762 வீடுகள் என்பது நம் நாட்டுக்கு சிறிய எண்ணிக்கையில்லை. இந்த திட்டத்தின் தனித்துவம் என்னவென்றால், கேரளாவில் ஒரு வீடு என்பதை கனவு என்று நினைத்தவர்களுக்கும், அந்த கனவை கண்டவர்களுக்கும் அது நனவாகியிருக்கிறது. இடதுஜனநாயக முன்னணி அரசு ஆட்சிக்கு வந்தபோது, மக்கள் எழுப்பிய முக்கிய பிரச்சனை வீடில்லை என்பதாகும். நான்கு ஆண்டுகளுக்குள் வீடுகள் கிடைக்கச் செய்வதே குறிக்கோளாக இருந்தது. இதையடுத்து, 5 லட்சம் குடும்பங்களின் ஆரம்ப மதிப்பீடு செய்யப்பட்டது. அனைத்து வீட்டுத் திட்டங்களையும் இணைத்து ஒரு பொதுத் திட்டத்தைத் தொடங்க முடிவு செய்யப்பட்டது. Livelyhood Inclusion Financial Empowerment என்கிற வாக்கியத்தின் முதல் எழுத்துகளை குறிக்கும் லைப்  (LIFE ) என திட்டத்திற்கு வடிவம் கொடுக்கப்பட்டது. இந்த திட்டத்திற்காக மத்திய அரசின் உதவி நாடப்பட்டது. கட்டி முடிக்கப்பட வேண்டிய அனைத்து வீடுகளுக்கும் மக்களின் ஆதரவு இருந்தது.  பல்வேறு துறைகளும் வீடு கட்டும் லைப் மிஷன் திட்டத்திற்கு பங்களிப்பு செய்து வருகின்றன. நாடும் நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்ததால் இது சாத்தியமானது. தமிழர் அப்துல்லா வழங்கிய நிலம் நமக்கு சொந்தமான ஒரு கலாச்சாரம் உள்ளது. இந்த நிலத்தின் கலாச்சாரம். அந்த கலாச்சாரத்தின் தனிச்சிறப்புகளில் ஒன்று, பிறர் மகிழ்ச்சியிலும் பங்கு பெறுவது. வீட்டை சொந்தமாக வைத்திருப்பவர்கள், இல்லாதவர்களுக்கு வீடுகட்ட உதவ முடிந்தது என்பது பெருமைக்குரிய விஷயம்.  கொல்லத்தில் வசிக்கும் தமிழரான அப்துல்லா, நிலக்கடலை விற்று வாழ்க்கை நடத்துபவர். அவர் இந்த திட்டத்தின் பயனாளிகளுக்காக ஒரு ஏக்கர் நிலத்தை வாங்கி ஒப்படைத்தார். இன்று காலை நாங்கள் ஒரு குடும்பத்தினரின் கண்களிலிருந்து வழிந்த கண்ணீரைப் பார்த்தோம். ஆனந்தக் கண்ணீர் என அவர்கள் கூறினார்கள். அவர்கள் அனைத்து வகையிலும் அரவணைக்கப்பட வேண்டியவர்கள். அதைத்தான் அரசு செய்தது.  லைப் திட்டத்தின் மூலம் வீடு கிடைத்த கரகுளம் ஓமனா - சந்திரன் தம்பதியின் புதுமனை புகுவிழாவில் தான் பங்கேற்றபோது அதை உணர்ந்தேன். வீடு ஒப்படைப்பதோடு முடிந்துவிடுவதல்ல லைப் திட்டம். தரமான வாழ்க்கைக்கான தொடர்ச்சியான தலையீடு இருக்கும். லைப் மிஷன் திட்டம் நிறைவடைவதற்குள் வீடு பெற தகுதி வாய்ந்த நபர்களின் பட்டியலைத் தயாரிக்கவும், அவர்களுக்கும் வீடு வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு முதல்வர் கூறினார். லைப் திட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு விருதுகளை முதல்வர் வழங்கினார்.  விழாவுக்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் ஏ.சி.மொய்தீன் தலைமை வகித்தார். லைப் மிஷன் முதன்மை அதிகாரி (சிஇஓ) யு.வி.ஜோஸ் அறிக்கை வாசித்தார். அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் வரவேற்றார். அமைச்சர்கள் ஏ.கே.பாலன், கே.ராஜு சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.கே.மது நன்றி கூறினார்.