tamilnadu

img

நிலைமையின் தீவிரத்தைப் புரிந்து கொண்டு அனைவரும் ஒத்துழைக்க கேரள முதல்வர் அழைப்பு

திருவனந்தபுரம்:
தளர்வுகளை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க சமூகத்தின் முழு விழிப்புணர்வும் அவசியம் என்றும், நிலைமையின் தீவிரத்தை புரிந்து கொண்டு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் கேட்டுக் கொண்டார்.
வெள்ளியன்று கோவிட் குறித்த ஆய்வுக் கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த பினராயி விஜயன் மேலும் கூறியதாவது: பட்டியலிடப்பட்ட விமானங்கள் வரத் தொடங்கியதும் குறைந்தது ஒரு லட்சம் பேராவது கேரளத்துக்கு வருவார்கள். பொது போக்குவரத்தை அனுமதிக்கும்போது பெருமளவில் கவனம்தேவை என்பதை நிகழ்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. கடுமையான நோய்கள்உள்ளவர்களுக்கு சுகாதாரத் துறை ஒரு சிறப்பு நெறிமுறையை உருவாக்கும். கேரள மக்களிடம் சுகாதார நிலை
மைகள் குறித்த புரிதல் அவசியம் என்பதை தற்போதைய நிலைமைகள் உணர்த்துகின்றன என்று முதல்வர் கூறினார்.

கோவிட் அதிகரிப்பு
கேரளத்தில் வெள்ளியன்று மேலும்111 பேருக்கு கோவிட் உறுதி செய்யப்பட்டது. இதில் 50 பேர் வெளிநாடுகளில்இருந்தும் 48 பேர் இதர மாநிலங்களில்இருந்தும் வந்தவர்கள். ஏற்கனவேசிகிச்சை பெற்று வந்தவர்களில்22 பேர் குணமடைந்தனர்.வெளிநாடுகளில் இருந்தும் இதர மாநிலங்களில் இருந்தும் 1,77,033 பேர் கேரளத்திற்கு வந்துள்ளனர்.இவர்களில் 93,783 பேர் (63 சதவிகிதம்) தீவிர நோய் பரவல் உள்ள பகுதிகளில் இருந்து வந்தவர்கள். இதில் சாலை வழியாக வந்தவர்கள் 79 சதவிகிதம், ரயில் மூலம் 10.81சதவிகிதம், விமானத்தில் 9.41 சதவிகிதம் பேரும் வந்தனர். தமிழ்நாட்டில் இருந்துதான் அதிகமானோர் (37 சதவிகிதம்) வந்துள்ளனர். கர்நாடகா 26.9 சதவிகிதம், மகாராஷ்டிரா 14 சதவிகிதம். வெளிநாடுகளான யுஏஇ-யில் இருந்து 47.8 சதவிகிதம் பேர் வந்தனர். ஏமன் 11.6 சதவிகிதம், குவைத் 7.6 சதவிகிதம். இவர்களில் 680பேருக்கு இதுவரை கோவிட் உறுதி செய்யப்பட்டது. இதில் 343 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 337 பேர் மற்றமாநிலங்களில் இருந்தும் வந்தவர்கள். மற்ற மாநிலங்களில் இருந்து வந்தவர்களில் மிக அதிக அளவில் நோய் தொற்று மகாராஷ்டிரத்தில் இருந்து வந்தவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. 

ஆன்றிபாடி பரிசோதனை
நோய் எதிர்ப்பு சக்தி (ஆன்றிபாடி) பரிசோதனையை பரவலாக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. அதற்காக 14 ஆயிரம் கருவிகள் ஐசிஎம்ஆர் இடமிருந்து வந்துள்ளன. இதில் 10 ஆயிரம் கருவிகள் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. மேலும்  40 ஆயிரம் கருவிகள் கிடைக்கும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்துக்குள் இந்த பரிசோதனைகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சமூகப் பரவல் உள்ளதா என்பதைஅறியவே இந்த நடவடிக்கை என முதல்வர் கூறினார். ஜுன் 8 முதல் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் வர உள்ளன. மத்திய அரசுஇதற்கான வழிமுறைகளை பிறப்பித்துள்ளன. பொதுவாக மத்திய அரசு பிறப்பித்த தளர்வுகள் அனைத்தும் கேரளத்தில் அமலில் உள்ளன. வழிபாட்டுத் தலங்களின் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து மத தலைவர்களுடனான சந்திப்பு நடந்தது.  

சபரிமலை தரிசனம் வெர்ச்சுவல் வரிசையால் கட்டுப்படுத்தப்படும்.  ஒரேநேரத்தில் 50 க்கும் மேற்பட்டவர்கள் சன்னிதானத்தை அடைய முடியாது. நிலக்கல், பம்பா மற்றும் சன்னிதானத்தில் உடல் வெப்பம் பரிசோதிக்கும் ஸ்கேனர்கள் நிறுவப்படும். முக கவசம் கட்டாயமாகும். பக்தர்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நெய்யை ஒப்படைக்கும் முறை பின்பற்றப்படும். தேவசம் ஊழியர்கள் முக கவசமும் கையுறையும் அணிவது கட்டாயம். மத்திய அரசின் உத்தரவின் படி, 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் சபரிமலையில் அனுமதிக்கப்பட மாட்டார்கள். கொடியேற்றமும் ஆறாட்டும் கட்டுப்பாடுகளுடன் நடைபெறும். இந்த நேரத்தில் பிற மாநிலங்களில் இருந்து பக்தர்கள் சபரிமலைக்குஅதிக அளவில் வருவதில்லை. சபரிமலை தரிசனம் தொடர்பாக மாநிலஅரசு எந்த நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை என்று முதல்வர் கூறினார்.